Jan 18, 2020

ஃபாஸ்ட் டேக் - சிறுகதை





அந்த இளைஞன் மேடையில் மைக் முன்பு நின்றிருந்தான்.
இந்தியாவின் இளம் தொழில்நுட்ப வல்லுநர் என மீடியாக்களால் பாராட்டப்பட்டவன்.அவனுடைய பல கண்டுபிடிப்புகள் வெற்றியடையவில்லை! இருந்தாலும் அவனுடைய புதுமையான  சிந்தனை காரணமாக அவனை இளம் தொழில்நுட்ப வல்லுநர் என மீடியாக்கள் கொண்டாடின.

அவனுடைய ஒரு புதிய கண்டுபிடிப்பு குறித்த விளக்கம் பெற,தகவல் தொழில்நுட்பத்துறையின் உயர் அதிகாரிகள் அரங்கில் அமர்ந்திருந்தனர்.அவன் பேச ஆரம்பித்தான்.


"அனைவருக்கும் வணக்கம்.நான் இன்று பேசப்போவது மிக முக்கியமான,உலகின் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடிய ஒரு புதிய தொழில்நுட்பம் குறித்து.

நமது பாக்கெட் மற்றும் பர்ஸ்களில் வைத்திருக்கும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை எடுக்காமலேயே அதில் இருக்கும் தகவல்களை ஸ்கேன் செய்து பணம் எடுக்கவும்,பொருட்களை வாங்கவும் கூடிய எலக்ட்ரானிக் பிக்பாக்கெட் முறை தற்போது பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.Radio Frequency identification technology (RFID) முறையில் Pos,Fastag போன்ற பல நன்மைகள் இருந்தாலும் எலக்ட்ரானிக் பிக்பாக்கெட் என்ற பெரும் கெடுதலும் உள்ளது.இந்த எலக்ட்ரானிக் பிக்பாக்கெட் முறையால் தற்போது கார்டுகளை பயன்படுத்துவது என்பது ஆபத்தான ஒன்றாக மாறி வருகிறது.

RFID பதிக்கப்பட்ட கார்டுகளை எலக்ட்ரானிக் பிக்பாக்கெட் முறையால் மோசடி செய்து திருடிவருவதாக வெளியாகிய வீடியோ பதிவால் உலக அளவில் மிகுந்த அச்சம் எழுந்துள்ளது.

பாக்கெட்டில் இருக்கும் Contactless Card-ஐ Radio Waves மூலம் எலக்ட்ரானிக் பிக்பாக்கெட் செய்ய முடியும் என எழுந்த அச்சத்தில் அவற்றை தடுக்க "RFID Blocking" பர்ஸ் மற்றும் வாலெட்களை இரகசியமாக அமெரிக்கா தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுநாள்வரை எலக்ட்ரானிக் பிக்பாக்கெட் என்று எந்தவொரு குற்றச் சம்பவமும் நிகழவில்லை,
அதேவேளையில் அவ்வாறு ஒரு சம்பவம் நடந்தால் அதை செய்தவரை கண்டுபிடிப்பது என்பது இயலாத காரியம்.

என்னுடைய தற்போதைய ஆய்வு இந்த "RFID Block" செய்யப்பட்ட பர்சுகளை தயாரிக்கும் முறை குறித்துதான்.அமெரிக்காவிற்கு முன்பே இந்தியா இதனை தயாரித்தால் உலக அளவில் இந்தியாவிற்கு இது பெருமை சேர்க்கக் கூடிய ஒன்றாக அமையும்.
இதற்காகத்தான் நான் அரசாங்கத்தின் அனுமதியைக் கோரியிருக்கிறேன்.நீங்கள் அரசாங்கத்திற்கு அளிக்கும் விளக்கத்தைப் பொறுத்து,அரசின் அனுமதியும்,அதற்கான நிதியும் ஒதுக்கப்படும் என்பதால் இந்த சோதனையில் உங்களுக்கு உள்ள சந்தேகங்களைக் கேளுங்கள்.அதற்கு விளக்கம் அளிக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு" என்றபடி அமர்ந்தான்.அவனுடைய உதவியாளன் சோதனை விபரங்கள் அடங்கிய கோப்புகளை அனைவருக்கும் விநியோகிக்க ஆரம்பித்தான்.

அனைவரும் கோப்புகளைப் புரட்ட ஆரம்பித்தனர்.அதில் உள்ள சிறு சிறு ஐயங்களை உடனுக்குடன் அவனது உதவியாளனிடம் கேட்டு அதிகாரிகள் தெளிவு பெற்றனர்.

"இப்போது நீங்கள் உங்கள் சந்தேகங்களைக் கேட்கலாம்" என்றான் இளைஞன்.தொழில்நுட்பத்தில் மிகுந்த ஆர்வமுடைய ஒரு அதிகாரி எழுந்து "Contactless Card-களை Read செய்து அதில் உள்ள வங்கி கணக்கு எண்,expiry date போன்றவற்றை எடுத்தாலும் Card-க்கான PIN நம்பர்,CVV Number உள்ளிட்டவை இல்லாமல் பணப்பரிமாற்றம் செய்ய முடியாது" எனவே இத்தகைய சோதனை தேவையா?"என்றார்.

இளைஞன் புன்னகையுடன் "மிகச் சிறப்பான கேள்வி. அனைவரும் அவருக்கு கைகளைத்தட்டி பாராட்டு தெரிவியுங்கள்" என்றான்.சன்னமான கைதட்டல் ஒலியைத் தொடந்து பேச ஆரம்பித்தான்."இதற்கு விளக்கம் அளிக்க வேண்டியது என்னுடைய கடமை.ரேடியோ வேவ்ஸ் மூலம் தகவல்களைத் திருடும் போது கார்டின் உள்ளே உள்ள விவரங்கள் மட்டும் திருடப்படுவதில்லை.கார்டின் மேல்புறத்தில் உள்ள எண்கள் உள்ளிட்ட அனைத்தும் சேர்த்தே திருடப்படுகின்றன.PIN என்பது இன்று ஒரு பொருட்டே அல்ல.எனவே  RFID Block செய்யப்பட்ட பர்சுகளை தயாரிப்பது மிகவும் அவசியம்"என்றான்.

கேள்விகள் தொடர்ந்தன.ஒவ்வொரு கேள்விக்கும் அவன் தெளிவான விளக்கங்களை அளித்துக் கொண்டே வந்தான்.இறுதியாக குழுவின் தலைவர் எழுந்து, "உங்களின் புதுமைகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற வேட்கை நியாயமானது.ஆனால் இதற்காக நீங்கள் பெரும் தொகை அரசாங்கத்திடம் கேட்டுள்ளீர்கள்.
இதுவரை நீங்கள் செய்த பெரும்பாலான கண்டுபிடிப்புகள் தோல்வியில் முடிவடைந்து உள்ளன.இந்த கண்டுபிடிப்பு வெற்றியடையும் என்பதற்கு உங்களால் உறுதி கூறமுடியுமா?

வெறும் வாய் வார்த்தையாக உறுதி கூறுவதைவிட, செயலளவில் நீங்கள் அதனைக் காட்டினால் நாங்கள் மகிழ்வோம்.எங்களுடைய அறிக்கை உங்களுக்கு சாதகமாக இருக்கும்.RFDI தொழில்நுட்பம் குறித்து உங்களுடைய வேறு ஏதேனும் சோதனை வெற்றி அடைந்து இருந்தால் அதனை எங்களுக்கு செயல்படுத்தி காட்டுங்கள்"என்றார்.

ஒரு நிமிடம் யோசித்த இளைஞன்,தன் உதவியாளன் காதில் ஏதோ கிசுகிசுத்தான். "சரி அடுத்த வாரம் நாம் நேரடி சோதனையை வைத்துக் கொள்ளலாம்.அனைத்து சுங்கச்சாவடிகளிலும் RFID ஸ்கேனர் தான் பயன்படுத்தப் படுகிறது.நான் அவற்றின் செயல்பாட்டை முடக்கிக் காட்டுகிறேன்.அப்போது உங்களுக்கு எனது கண்டுபிடிப்பு குறித்த நம்பிக்கை பிறக்கும்"என்றான்.கூட்டம் கலைந்தது.

அடுத்த வாரம் அதிகாரிகள் குழு சோதனைக்கு கிளம்பியது.அரசாங்க வாகனம் என்பதற்கான அனைத்து அடையாளங்களும் அகற்றப்பட்டன.இளைஞன் கொண்டு வந்திருந்த ஃபாஸ்ட் டேக் ஸ்டிக்கர் வாகனத்தின் முகப்பில் ஒட்டப்பட்டது.அவன் ஏதோ ஒரு கருவியைக் கையில் வைத்திருந்தான்.அதில் பச்சை மற்றும் சிவப்பு விளக்குகள் இருந்தன.அதிகாரிகள் அதனையே நோக்கினர்.

"சரி கிளம்பலாம்"என்றான்.வாகனம் கிளம்பியது.அந்த
சுங்கச்சாவடியில் ஃபாஸ்ட் டேக் ஸ்கேனர் வேகமாக ஸ்கேன் செய்து வாகனங்களை அனுப்பிக் கொண்டிருந்தது.இவர்களது வாகனம் ஸ்கேனர் கருவியின் எல்லைக்குள் வந்தவுடன் அவன் தனது கருவியின் சிவப்பு நிற பட்டனை அமுக்கினான். சுங்கச்சாவடியின் ஸ்கேனர் அவர்களது வாகனத்தின் ஸ்டிக்கரை ஸ்கேன் செய்ய முயன்றது.ஆனால் அவர்களது வாகனத்தின் ஸ்டிக்கர் ஸ்கேன் ஆகவில்லை! கேட் திறக்கப்படவில்லை! சுங்கச்சாவடியில் இருந்த அலுவலர் கையில் ஒரு ஸ்கேனர் கருவியை எடுத்துக்கொண்டு வந்து ஸ்டிக்கரை ஸ்கேன் செய்தார்.
அப்போதும் ஸ்கேன் ஆகவில்லை.மீண்டும் மீண்டும் முயற்சித்தார்.பத்து நிமிடங்கள் கழிந்தன.ஸ்கேன் ஆக வில்லை. "குறிப்பிட்ட நேரத்திற்குள் ஃபாஸ்ட் டேக் ஸ்கேன் ஆகவில்லை என்றால் இலவசமாக சுங்கச் சாவடியை கடந்து செல்ல அனுமதிக்க வேண்டும் என்பது விதி.உங்களுக்கு தெரியாதா?"என்று அவன் விவாதம் செய்ய ஆரம்பித்தான்! சிறிது நேரத்தில் வேறு வழியின்றி சுங்கச்சாவடியின் கதவுகள் திறந்தன! புன்னகையுடன் தன் கையில் இருந்த கருவியின் பச்சை பட்டன்களை அழுத்தியவாறு அதிகாரிகளை நோக்கினான் இளைஞன்!

சோதனை தொடர்ந்தது.அந்த தேசிய நெடுஞ்சாலையில் இருந்த 7 சுங்கச்சாவடிகளில் அந்த வாகனம் இவ்வாறு கடந்து சென்றது.அதிகாரிகளுக்கு ஒரே ஆச்சரியம்!எந்த ஒரு ஃபாஸ்ட் டேக் ஸ்கேனரிலும் இவர்கள் வாகனம் ஸ்கேன் ஆகவில்லை.சுங்கச்சாவடி அலுவலர்கள் ஸ்கேனரை கையில் எடுத்துக் கொண்டு வந்து ஸ்டிக்கரை ஸ்கேன் செய்தும் ஸ்கேன் ஆகவில்லை."RFID ஸ்கேன் ஹேக்கிங் அற்புதமாக வேலை செய்கிறது" என்று அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.


இந்த சோதனை குறித்தும்,RFID பிளாக் செய்யப்பட்ட பர்சுகளை தயார் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும்,நிதி ஒதுக்கினால் சோதனை வெற்றி பெறும் என்றும் அரசாங்கத்திற்கு அவர்கள் பரிந்துரை செய்தனர்.மிக விரைவாக அரசு சார்பில் ஒரு பெரும்தொகை அவனுடைய கணக்கிற்கு மாற்றப்பட்டது.

அவனுடைய சோதனை தொடங்கியது.ஒரு மாதம் கழித்து சோதனையின் தற்போதைய நிலவரத்தை தெரிந்து கொள்வதற்காக அதிகாரிகளின் குழு அவனுடைய ஆய்வுக்கூடத்திற்குச் சென்றது.அந்த ஆய்வுக்கூடம் பூட்டப்பட்டிருந்தது.

ஆய்வுக்கூடக் கதவின் முகப்பில் ஃபாஸ்ட் டேக் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது!


அவனை எங்கு தேடியும் கிடைக்கவில்லை."ஒரு மாதமாக அவனை ஆய்வுக்கூடத்தின் பக்கமே பார்க்க முடியவில்லை" என்றான் அவனுடைய உதவியாளன்.சோதனை தோல்வி அடைந்து விரக்தியில் தற்கொலை ஏதேனும் செய்து கொண்டானோ என்ற சந்தேகத்தில்  ஆய்வுக்கூடத்தின் கதவினை உடைத்து திறந்து உள்ளே சென்றனர்.அதிர்ச்சி அனைவரையும் கவ்வியது.ஆய்வுக் கூடம் பொருட்கள் எதுவுமின்றி காலியாக இருந்தது.மேஜைமேல் சுங்கச்சாவடி சோதனையின் போது இளைஞன் கையில் வைத்திருந்த கருவி மட்டுமே இருந்தது.


அரசாங்கத்திடம் பெரும்பணம் பெற்ற  இளைஞன், அரசாங்கத்தையும்,அதிகாரிகளை ஏமாற்றி தப்பியோடியது புரிந்தது.பெருத்த ஏமாற்றத்துடன் அதிகாரிகள் திரும்பினர்.

ஆனால் ஏழு சுங்கச்சாவடிகளின் ஸ்கேனர்களும் அவர்களது ஃபாஸ்ட் டேக் ஸ்டிக்கரை மட்டும் ஏன் ஸ்கேன் செய்யவில்லை என்ற ஆச்சரியத்திற்கு மட்டும் விடையே கிடைக்கவில்லை!


அந்த இளைஞனின் உதவியாளனுக்கும் அதே சந்தேகம் தான்.மேஜைமேல் இருந்த கருவியில் பேட்டரி மற்றும் லைட்டைத் தவிர ஒன்றுமில்லை.கதவில் ஒட்டப்பட்டிருந்த ஃபாஸ்ட் டேக் ஸ்டிக்கரை நீண்ட நேரம் பல வழிகளில் ஆய்வு செய்த அவன் அதிர்ந்தான்.

ஆம்!அந்த ஸ்டிக்கர் பிளாக் செய்யப்பட்ட ஃபாஸ்ட் டேக் ஸ்டிக்கர்.இளைஞன் தனது பெயரில் ஒரு ஃபாஸ்ட் டேக் ஸ்டிக்கர் வாங்கி,அதனை தற்போதைக்கு வேண்டாம் என பிளாக் செய்திருந்தான்.எந்த ஒரு ஸ்கேனரும் பிளாக்டு ஃபாஸ்ட் டேக் ஸ்டிக்கரை ஸ்கேன் செய்யாது.மிகச் சுலபமான ஒரு வழியைப் பயன்படுத்தி தங்கள் அனைவரையும் அவன் முட்டாளாக்கி விட்டான் என்பதை உணர்ந்த அந்த உதவியாளன் அதிர்ச்சியில் உறைந்தான்!

- அகன்சரவணன்

No comments:

Post a Comment