Feb 3, 2024

Today's Prayer

 




செய்திகள்:


மேட்டூர் அணையிலிருந்து இன்று முதல் தண்ணீர் திறக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.





ஜார்க்கண்ட் முதல்வராக சம்பாய் சோரன் பதவியேற்பு.



சென்னை டூ ஹாங்காங் மீண்டும் விமான சேவை.



ஜெய்ஸ்வால் அபார பேட்டிங். இங்கிலாந்துக்கு எதிராக முதல் நாளில் இந்தியா சிறப்பான ஆட்டம்.


News:


Chief Minister M.K.Stal orders to release water from Mettur dam from today.



Sambhai Soren sworn in as Chief Minister of Jharkhand.



Chennai to Hong Kong flight service start from today 



Jaiswal's excellent batting. India played well against England on the first day.



திருக்குறள்:


விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று



விருந்தினர் வீட்டிற்கு வெளியே இருக்கத் தான் மட்டும் தனித்து உண்பது, சாவைத் தடுக்கும் மருந்தே என்றாலும் விரும்பத் தக்கது அன்று.



பழமொழிகள்:


 Do in Rome as Romans do.


ஊரோடு ஒத்து வாழ்.

Jan 6, 2024

06/01/2024 Today's Prayer

 



திருக்குறள்;


மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை

என்நோற்றான் கொல்எனும் சொல்.



விளக்கம்:

மகன்,தந்தைக்குச் செய்யும் உதவி ‘இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன நோன்பு செய்தானோ’ என்னும் புகழ்ச் சொல்லே ஆகும்.




பழமொழி:


கல்வி கரையில கற்பவர் நாள்சில.


Art is long but life is short.



செய்திகள்:



சி,டி,பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.3,000. தமிழக அரசு அறிவிப்பு.


பதினொரு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.



தில்லி குடியரசு தின விழாவில் பங்கேற்க தமிழக அரசின் ஊர்தி தேர்வு.



எல் 1 புள்ளியை இன்று சென்று அடைகிறது இந்தியாவின் ஆதித்யாவின் விண்கலம்.


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 'டி-20' போட்டியில் ஷபாலி, மந்தனா அரைசதம். இந்திய பெண்கள் அணி வெற்றி.


News:

Pongal Bonus Rs.3,000 for C, D, Section employees.Tamil Nadu Government Notification.


Heavy rain is likely in eleven districts today, according to the Chennai Meteorological Department.



Selection of Tamil Nadu Government vehicle to participate in Republic Day celebrations in Delhi.



India's space shuttle Aditya will reach the L1 point today.


Shabali, Mandhana hit fifties in first T20 against Australia. Indian women's team wins.

Dec 31, 2023

2023 - படித்ததில் பிடித்தது

 





புத்தகம் வாசிக்க என தனியாக நேரம் ஒதுக்கவில்லை.எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் புத்தக வாசிப்பு தான்!


சிறந்த ஓய்வு என்பது ஒரு வேலைக்கு மாற்றாக வேறு வேலை செய்வது என்பர்.அதனையொற்றி ஒரு புத்தகம் சலிப்பூட்டும் போது வேறு புத்தகம் வாசிப்பது புத்தக வாசிப்பை மேலும் சுவாரஸ்யமூட்டுவதாய் மாற்றுகிறது!


நூலகங்கள்,வாடகை நூல் நிலையங்கள், புத்தகக் கண்காட்சிகள்,புத்தகக் கடைகள் இவையெல்லாம் சொர்க்கத்தின் திறவுகோல்களாகவே காட்சி தருகின்றன.


மாலைநேர மழைக்காலம்,மலை இரயிலின் சன்னலோர இருக்கை,ஒருகையில் புத்தகம்,மறுகையில் தேநீர் கோப்பை இதைவிட சொர்க்கம் இருக்கிறதா எனத் தெரியவில்லை!




நீர்வழிப் படூஉம் புனைபோல,நூல் வழிப்படுவதாகவே வாழ்க்கை அமைந்துள்ளது.ஆனாலும் எங்கள் வீட்டினைக் கூட்டிப்பெருக்கும் போதெல்லாம் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் புத்தகங்களை சலிப்பின்றி எடுத்து அடுக்கி வைத்துக் கொண்டே இருக்கும் எங்கள் வீட்டுப் பெண்களுக்கு கோடானு கோடி நன்றி!




2023 இல் -படித்ததில் பிடித்த 10 புத்தகங்கள் :


1)துயில்-எஸ்.ரா


2)The Da Vinci Code-Dan Brown


3)திராவிட மாயை–சுப்பு


4)The Greek Myths- Graves


5)குரு-பாலகுமாரன்


6)வேல ராமமூர்த்தி கதைகள்


7)Ulysses-Joyce


8)ஆ-சுஜாதா


9)அறம்-ஜெமோ


10)The Star-HG Wells


-அகன் சரவணன்






Apr 23, 2023

வாசிப்போம் உலகை நேசிப்போம்!

 




அறிவு வளர்ந்து முதிர முதிர வாய் தன் வேலையைக் குறைத்துக் கொள்ளுமாம்.அந்த வகையில் அறிவை முதிரச் செய்வன புத்தகங்கள்.





லாரிபேஜ் மற்றும் செர்கிபிரின் இருவரும் இணைந்து கூகுள் நிறுவனத்தை உருவாக்கினர்.அமெரிக்க பணக்காரர்கள் வரிசையில் தற்போது இவர்கள் 9 மற்றும் 10 ஆம் இடத்தில் இருக்கிறார்கள்.இவர்கள் இருவரும் தற்போது கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் (CEO) இருந்து விலகி,அனைத்துப் பொறுப்புகளையும் சுந்தர் பிச்சையிடம் கொடுத்துள்ளனர்.




சரி இனி இவர்கள் என்ன செய்யப்போகின்றனர் என்றால்,புதிய கண்டுபிடிப்பில் தங்கள் கவனத்தைச் செலுத்த வேண்டி தீவிரமாக புத்தகம் வாசிக்கப் போகின்றனராம்! 

தீவிரமான புத்தக வாசிப்பின் மூலம் புதிய சிந்தனைகளையும்,அதன் மூலம் புதிய கண்டுபிடிப்புகளையும் முன்னெடுக்க உள்ளதாக மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்துள்ளனர்.

கூகுள் நிறுவனத்தை உருவாக்குவதற்கு முன்பும் இருவரும் தீவிர புத்தக வாசிப்பாளர்களே.புத்தக வாசிப்பின் மூலமே புதிய சிந்தனையைப் பெற முடியும் என்று இவர்கள்  நம்பினர்.அது கூகுளின் வளர்ச்சி மூலம் இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது.




எல்லாவற்றுக்கும் இணையத்தையே,
குறிப்பாக கூகுளையே நம்புவோர்க்கு,புத்தக வாசிப்புதான் புதிய சிந்தனையைத் தரும் என்பதை கூகுள் நிறுவனர்கள் தங்களின் வெற்றி மூலமே நிரூபித்துள்ளனர்.அடுத்து இவர்கள் என்ன கண்டுபிடிக்கப் போகிறார்கள் என உலகமே இன்று இந்த புத்தகக் காதலர்களுக்காகக் காத்துக்கொண்டு இருக்கிறது.

இணைய அறிவே வேண்டாமா? என்றால் அவசியம் வேண்டும்!உணவாக அல்ல!ஊறுகாயாக!

இணையம் மூலம் நாம் அறிவது தகவல்கள் மட்டுமே.சுய சிந்தனையே கண்டுபிடிப்புகளின் தாயாகும்.அதற்கு அடித்தளமிடுபவை புத்தகங்களே.

நீங்கள் சிலநாட்களுக்கு முன் இணையம் மூலம் தேடிப் பெற்ற தகவல் தற்போது உங்களுக்கு நினைவில் இருக்காது.ஆனால் எப்போதோ சிறு வயதில் படித்தவை உங்கள் நினைவில் இருக்கும்.ஏனெனில் இணையம் தகவல்.புத்தகம் அறிவு.

அன்பு நண்பர்களே,நேரமில்லை என்று சாக்கு கூறுவதை உதறிவிட்டு புத்தகவாசிப்பின் பக்கம் உங்களின் கவனத்தைத் திருப்புங்கள்.
குழந்தைகளையும் வாசிக்க ஊக்குவியுங்கள். புத்தகங்களைக் குழந்தைகளுக்கு பரிசாகக் கொடுங்கள்.உங்கள் குழந்தைகளுக்கு உங்களின் மிகச்சிறந்த வழிகாட்டலாக இது அமையும்.2023 ஆம் ஆண்டிற்கான உங்களின் சபதமாக இது அமையட்டும்.




அடுத்தவர் அறிவைக் கடன் வாங்கிக் கொண்டு இருக்காமல் சுயமாகச் சிந்திப்போம்.புதிய புதிய கண்டுபிடிப்புகளை நமது குழந்தைகள் உருவாக்கத் தூண்டுவோம்.

வாசிப்போம் உலகை நேசிப்போம்!

அகன்சரவணன்
9659746646

Apr 4, 2021

அரசியல்-தொழில் அல்ல;சேவை!

 







அரசியல்,பொருளாதாரம் மற்றும் சமூகம் ஆகியவை உலகச் சங்கிலியின் மூன்று கண்ணிகள் என்பார் கார்ல்மார்க்ஸ்.


ஒருகாலத்தில் சேவைப் பணியாக  இருந்த,உலகச் சங்கிலியின் முதன்மைக் கண்ணியான அரசியல்,தனது குறிக்கோளில் இருந்து முற்றும் பிறழ்ந்து,தொழில் என இன்று மாறிப்போனது துயரகரமான ஒன்றுதான்!



இன்று அரசியலில் இருக்கும் மற்றும் புதிதாக அரசியலுக்கு வர இருக்கும் பெரும்பான்மையான அரசியல்வாதிகளின் எண்ணம்,இந்த  வியாபாரத்தில் இருந்து என்ன வருமானம் கிடைக்கப் போகிறது என்பதில் தான் இருக்கிறது!



தேர்தலுக்காக தொகுதிக்கு 10 கோடி 20 கோடி என செலவு செய்யும் ஆட்கள்,வெற்றி பெற்றவுடன் மக்களுக்கு சேவை செய்வார்கள் என மக்கள் எதிர்பார்ப்பது ஆச்சரியமூட்டும் ஒன்று.ஒவ்வொருவரும் தாங்கள் முதலீடு செய்த பணத்தை இரட்டிப்பாக,மும்மடங்காகத் திரும்பப் பெறும் செயல்பாடுகளில்தான் முனைப்புக் காட்டுவர் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது!



கோடிகளைக் கொட்டி செலவு செய்யக்கூடிய ஒரு வேட்பாளர்,வெற்றி பெற்றவுடன் மக்களுக்கு சேவை செய்வார் என்பது நகை முரணாகவே தொடர்ந்து கொண்டு இருக்கிறது.




லஞ்சம்,ஊழல் போன்ற மலிவான செயல்கள் எல்லாம் அவமானமூட்டும் பெரும் பாவச்செயல்களாக ஒருகாலத்தில் இருந்தன.ஆனால் இன்று அவை பெரும்பாலான மக்களால் ஏற்றுக்கொள்ள கூடிய,ஒரு சாதாரண செயலாக மாறிப்போய் விட்டன என்பது அவலத்தின் உச்சம்.




தன்னுடைய வேலையை மிகச் சுலபமாக செய்துகொள்வதற்காக லஞ்சம் கொடுக்கக் கூடிய ஒருவர்,வாய்ப்பு கிடைக்கும்போது லஞ்சம் வாங்கக் கூடிய ஒருவர்,தன்னை ஆள்பவர்கள் நேர்மையாக இருக்க வேண்டும் என விரும்புவதில் எந்தவிதமான முகாந்திரமும் இல்லை!



நான் சிறு சிறு அளவில் லஞ்சம் கொடுப்பேன்,வாக்களிக்க பணம் பெறுவேன்,எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நானும் லஞ்சம் பெறுவேன்.ஆனால் எனக்கு வரக்கூடிய ஆட்சியும்,நான் தேர்ந்தெடுக்கக்கூடிய அரசியல்வாதியும் லஞ்ச ஊழலுக்கு அப்பாற்பட்டவராக - நேர்மையானவராக இருக்க வேண்டும் என மக்கள் நினைப்பது எந்த விதத்திலும் நியாயமில்லை!முதலில் நல்லாட்சிக்கு நாம் தகுதியானவர்கள் தானா என்பதை ஒவ்வொருவரும் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.









ஒரு வாக்காளர் வாக்களிக்க பணம் பெறுகிறார் என்றால்,அவர் மறைமுகமாக அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நடக்கக்கூடிய லஞ்ச ஊழலில் கூட்டு வைத்துக் கொள்கிறார் என்பதே நிதர்சனமான உண்மையாகும்!




வசதியற்ற ஏழை,எளிய மக்கள் வாக்களிக்கப் பணம் வாங்குவது என்பது ஏற்புடையதுதானே என்ற ஒரு நியாயப்படுத்தலும் இங்கு நடக்கிறது. ஆனால் எந்த விதத்தில் லஞ்சம் பெற்றாலும் அது அறமற்ற செயலே என்பதை மக்கள் உணரவேண்டும்.




வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வேண்டி அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு என தனியாகப் பெரும் நிதியை ஒதுக்கி வைக்கின்றன.மேலும் பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தொழிலதிபர்கள் தேர்தல் நிதி என கோடிக்கணக்கான பணத்தை அரசியல் கட்சிகளுக்குக் கொட்டிக் கொடுக்கின்றனர்.இவ்வாறு கொடுக்கப்படும் நிதிக்கு பிரதியுபகாரமாக,குறிப்பிட்ட கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் பணம் கொடுத்தவர்களுக்குத் தேவையானவற்றை சட்டத்துக்கு அப்பாற்பட்டு செய்ய மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை!எனவே வாக்காளிக்கப் பணம் பெறுவது என்பது ஊழலின் ஒரு ஆழமான ஊற்றுக்கண் தான்!





ஒரு அரசியல் கட்சியின் தலைவர் என்பவர் இந்த சமூகத்தில் இருந்துதான் உருவாகிறார்.சமூகம் முழுக்கவே லஞ்ச ஊழல் புரையோடிப் போயிருக்கும் போது,அச்சமூகத்திலிருந்து வரக்கூடிய தலைவர் அவ்வாறே இருப்பதில் எந்த வியப்பும் இல்லை.விதையொன்று போட்டால் சுரையொன்றா முளைக்கும்?



இதில் இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவெனில்,அரசியல் கட்சிகளின் தலைவர்கள்,இது என்னுடைய சாதனை.இதை நான் செய்தேன் என பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் குறித்து பிரச்சாரங்களில் கூறுவதும்,அவற்றைப் பெரிய அளவில் விளம்பரப்படுத்துவதும் தான்!



மக்களின் வரிப்பணத்தில்,மக்களுக்கான திட்டங்களை நிறைவு செய்வதற்குத்தான் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதற்கான அதிகாரம்,வசதிகள்,ஊதியம் மற்றும் படிகள் வழங்கப்படுகின்றன.

இவை அனைத்தையும் பெற்றுக் கொண்டு அதற்கான வேலையை செய்வதுதானே முறை! அந்த வேலையை ஏதோ சாதனை எனக் கூறுவது எந்த விதத்தில் நியாயம்.மேலும் அவர்கள் தங்களுடைய கைக்காசை செலவு செய்து மக்களுக்கான எந்த ஒரு திட்டத்தையும் கொண்டு வருவதில்லையே!இங்கே இருப்பதைத் தான் எடுத்துக் கொடுக்கிறார்கள்.அதற்குத் தான் சாதனை,சரித்திரம் என்ற அறைகூவல்கள்!



ஒரு குடும்பத்தலைவி உணவு சமைத்துவிட்டு நான் சமைத்தேன் இது சாதனை என்று கூறுவதும்,ஒரு பணியாளர் காலை முதல் மாலை வரை அலுவலகத்தில் பணியாற்றிவிட்டு நான் வேலை செய்தேன்,இது சாதனை எனக் கூறுவதும் எத்தனை அபத்தமானதோ அத்தனை அபத்தமானது ஒரு அரசியல்வாதி தனது பணியைச் செய்துவிட்டு அதனை சாதனை என்று கூறுவது!



மக்கள் நலத் திட்டங்கள் என்பவை உள் பாக்கெட்டில் இருக்கும் பணத்தை எடுத்து, வெளியில் இருக்கும் பாக்கெட்டில் வைப்பது போன்றது தான்.இதில் சாதனை என்பதற்கு எந்தவிதமான இடமும் இல்லை.







ஒரு சிறந்த அரசியல் கட்சிக்கும்,அதன் தலைமைக்கும் புதுமையான சிந்தனைகளும்,புத்திசாலித்தனமான யோசனைகளும் இன்று நிச்சயம் தேவை என்பது காலத்தின் கட்டாயம்.மக்களுக்கு காலாகாலத்திற்கும் பயனளிக்கும் வகையிலான,மற்றவரால் செய்ய இயலாத மகத்தான சாதனைகளைத் தம் ஆட்சியில் ஒரு தலைவர் புரிந்துள்ளார் எனில்,அதனைச் சாதனை என்று அதனால் பயனடையும் மக்கள்தானே கூறவேண்டும்.எதிர்கால வரலாறுதானே அதைப் பற்றி பேச வேண்டும்! அப்போதுதான் அந்த இடத்தில் அரசியல் என்பது சேவைப் பணியாக இருக்கிறது என்று பொருள்.ஆனால் இன்றோ எங்கு நோக்கினும் சுய விளம்பரங்கள் பளிச்சிடுகின்றன.இவை அரசியலைத் தொடர்ந்து வியாபாரம் எனப் பிரகடனப்படுத்தும் விளம்பரங்களாகத்தான் தெரிகின்றன!





தேர்தல் அறிக்கைகளில் கடன் தள்ளுபடி செய்வேன்,மக்களுக்கு இவ்வளவு பணம் கொடுப்பேன் என அரசியல்வாதிகள் கூறுகிறார்களே தவிர,கடன் வாங்காத நிலையை உருவாக்க,மக்களுடைய பொருளாதார நிலையைச் செழிப்பாக்க, மக்களின் வருமானத்தை உயர்த்த, செலவுகளை குறைக்க எந்தத் திட்டமும் இல்லை.தப்பித்தவறி அவ்வாறு இருக்கக்கூடிய ஒரு சில திட்டங்கள் மக்கள் ஏற்கக்கூடிய அளவிலான, பொருளாதார ரீதியிலும்,அறிவியல் பூர்வமாகவும் சாத்தியமாகக் கூடியவையாக இல்லை!



அடிப்படைப் பொருட்களை வாங்குவதற்கு மக்களுக்கு பணம் கொடுப்பதைவிட,மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்கச் செய்வதே சிறந்ததொரு நிர்வாகமாக இருக்க முடியும்!



கவர்ச்சி அறிவிப்புகள் என்பவை உணவின் ஊறுகாய் போலதான் இருக்க வேண்டும்.ஊறுகாய் அளவாக இருந்தால் மட்டுமே உணவு சுவையளிக்கும்.ஆனால் இன்றைய கவர்ச்சி அறிவிப்புகள் ஊறுகாய் போன்று அமையாமல் உணவாகவே மாறி இருப்பது காலக்கொடுமை!வயிற்றுப் பசிக்கு ஊறுகாயை மட்டுமே அள்ளி அள்ளி விழுங்க முடியுமா? 



திரைப்படங்களில் வரக்கூடிய அரசியல் தொடர்பான காட்சிகளும்,நடைமுறையில் நடக்கக் கூடியவையும் ஒன்றுதானோ  எனும் காட்சிப்பிழை தோன்றும் அளவிற்கு இன்றைய அன்றாட நிகழ்வுகள் மக்களை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன.



கிட்டத்தட்ட 5 லட்சம் கோடி ரூபாய் கடன் இருக்கக்கூடிய தமிழ்நாட்டை ஆட்சி செய்ய இத்தனை பேருக்கு விருப்பம் இருப்பதற்குக் காரணம்,மேலும் மேலும் கடன் வாங்குவோம்.அதில் நமக்கான ஒரு பங்கை ஒதுக்கி கொள்வோம் என்பதாகத்தானே இருக்க முடியும்.




இங்கு பல விஷயங்களை மக்கள் சுலபமாக மறந்துவிட வேண்டும் என அரசியல் கட்சிகள் விரும்புகின்றன.மக்களும் ஒரு சில விஷயங்களை மறந்தும் போய் விடுகிறார்கள்.


எந்த ஒரு சிறு வேலைக்கும் கூட லஞ்சம்,சிபாரிசு,ஊழல் என சமுதாய முழுக்கவே புரையோடிப் போய் கிடக்கிறது.




காந்தியடிகள் போன்றோ காமராஜர் போன்றோ ஏன் இன்றைக்கு ஒரு சிறந்த தலைவர் உருவாகவில்லை என்பது பெரும்பாலான மக்களின் ஏக்கமாக இருக்கிறது.சிறந்த தலைவர்கள் என்பவர்கள் எங்கேயோ வானத்திலிருந்து திடீரென்று குதிப்பது கிடையாது.



ஓரு இயந்திரம் பழுதாகிக் கிடக்கும்போது அதன் உற்பத்திப் பொருளை மட்டுமே குறை கூறிப் பயன் இல்லை.அவ்வாறே சமுதாயம் பழுதாகிக் கிடக்கும்போது அது உற்பத்தி செய்யும் உற்பத்தி பொருளான தலைவர்களை மட்டுமே நாம் குறை கூறுவது சரியாக இருக்காது.முகத்தில் கரியைப் பூசிக் கொண்டு, கண்ணாடியில் அழகாக தெரிய வேண்டும் என்பதில் எந்த நியாயமும் இல்லை.





ஒரு காலத்தில் அரசியல் என்பது சேவையாக இருந்தது.இருக்கக்கூடிய வளங்களை மக்களுக்கு சிறப்பாக பங்கிட்டு வழங்குவது,சமூக நீதி காப்பது, சகோதரத்துவம்,மதசார்பின்மை இறையாண்மை போன்றவை அரசாங்கங்களின் உயரிய முக்கிய கொள்கைகளாக இருந்தன.ஆனால் இன்றைய சூழலில் அரசியல் என்பது ஒரு பெரும் லாபம் அளிக்கக் கூடிய ஒரு மாபெரும் வியாபாரமாக மாறிவிட்டது.இதில் எந்த அளவு முதலீடு செய்தால்,எவ்வளவு உழைத்தால்,எத்தகைய களப்பணி ஆற்றினால் இதிலிருந்து எவ்வளவு எடுக்கலாம் என்பது பெரும்பாலான அரசியல்வாதிகளின் கொள்கைக் கணக்காக இருக்கிறது.



வெற்றி பெற்றால் ஒரு கணக்கு,தோல்வி அடைந்தாலும் தான் பெற்ற வாக்குகள் அடிப்படையில் ஒரு கணக்கு என அரசியலே ஒரு லாப நட்டக் கணக்காகவே தொடர்கிறது.

 



புதிதாக கட்சி ஆரம்பித்து தேர்தலில் நிற்பவர்களின் எண்ணமோ,இந்த தேர்தலில் பெறும் ஓட்டு சதவீதத்தைப் பொறுத்து அடுத்தடுத்த தேர்தல்களில் பெரிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி எவ்வளவு வசதிகளைப் பெறமுடியும் என்பதாகவே இருக்கிறது.




அரசியலைத் தொழில் எனும் தளத்திலிருந்து சேவைத் தளத்திற்கு மீண்டும் மடைமாற்றம் செய்ய வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்குமே உள்ளது.






மாற்றம் என்பது ஒவ்வொரு தனி மனிதனிடம் இருந்தும் தொடங்க வேண்டும்.அது அப்படியே பரவி சமுதாயத்தில் ஒரு இயக்கமாக மாற வேண்டும்.அப்போது தான் மிகச் சிறந்த அரசியல் தலைவர்களும்,சிறப்பான ஆட்சியும் நமக்குக் கிடைக்கும்.




நீதி,நேர்மை,நியாயம் போன்றவை வெறும் வார்த்தைகளாக இல்லாமல் மக்களின் வாழ்க்கையாக என்று மாறுகிறதோ அன்றுதான் அவை அரசியல் களத்திலும் பிரதிபலிக்கும். ஆட்சியாளர்களிடம் வெளிப்படும்.



தனிமனித மாற்றம் ஒன்றே இதற்குத் தீர்வாக அமையும்.தனிமனிதர்கள் இணைந்ததே சமுதாயம் ஆகும்.சமுதாய மாற்றம் ஏற்பட வேண்டுமாயின்,நல்ல ஆட்சியாளர்கள் வேண்டுமெனில்,நல்ல அரசே மக்களின் தேவையெனில்,தனி மனிதர்கள் நியாய உணர்வு கொண்டவர்களாகவும்,அதன் பயனாய் நமது சமுதாயம் ஒரு உன்னத சமுதாயமாகவும் மாறவேண்டும்.அப்போதுதான் தனிமனித ஒழுக்கமும்,நியாய உணர்வும்,திறனும் மிகுந்த சிறப்பான ஒருவர் சமுதாயத்திலிருந்து தலைவராக உருவாக வாய்ப்பு ஏற்படும்.




இன்று தமிழகம் லஞ்சம்,ஊழல் எனும் பெரும் நோய்களுடன் போராடியவாறு தேர்தலை எதிர்கொள்கிறது.இந்த நோய்களுக்கு மிகச் சிறந்த அறுவை சிகிச்சை மக்களின் மனமாற்றம் மட்டுமே.



தேர்தலில் வாக்களிக்காமல் விடுவது போரில் புறமுதுகிட்டு ஓடுவதற்கு ஒப்பான செயலாகும்.நாம் புறநானூறு தந்த வீரர்கள்.எனவே நெஞ்சுரத்துடன் வாக்களிப்போம்.வீரமும் ஈரமும் தமிழர்களின் இரண்டு கண்கள் அல்லவா!









வாக்கு என்பது மிகப்பெரிய ஆயுதம்.அதனை அற்ப காசுக்காக நாம் அடகுவைப்பது புத்திசாலித்தனம் ஆகாது.




தேர்தல் அறிக்கைகள்,கருத்துத் திணிப்புகள்,பிரச்சாரங்கள், பணப்பட்டுவாடா இவற்றையெல்லாம் தாண்டி நம் மனசாட்சிப்படி இந்த முறையாவது வாக்களிக்கத் தயாராவோம்! நல்ல ஆட்சிக்குத் தகுதியுடையவர்களாய் நம்மை மாற்றிக்கொள்வோம்.எதிர்காலம் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையில் தானே மனிதனின் ஒவ்வொரு நாளும் கடக்கிறது!



- அகன் சரவணன்





Feb 1, 2021

Facility to withdraw money through QR Code at SBI ATMs:

 





State Bank of India had introduced the facility of withdrawing cash at ATMs without ATM card and PIN number.


Many people are using this feature called YONO CASH.


Currently the facility of withdrawing money by scanning the QR code has been introduced by the bank.



We do not need an ATM card or PIN to use this feature.






 How to withdraw money with QR Code:


 >Select QR Cash option at ATM.


 >Select amount.


 >Login your Yono Lite app on your mobile.


 >Select QR Cash withdrawal on your mobile.







 >Scan the QR code that appears on the ATM screen.


 >You will receive a notification message on your phone that the cash withdrawal has been completed successfully with the QR Code.


 >Next,press the continue button at the ATM.


 >The amount you choose will be available from the ATM.



 Hint:


 # This is a trial attempt so the customer can only withdraw money 2 times a day.



 # A maximum of only 4000 can be withdrawn through this facility per day.



# The bank has announced that the ceiling will be raised as soon as possible depending on the success of the facility.


# This facility can be used to withdraw money through ATM for immediate and urgent needs.



-Agan Saravanan

Jan 31, 2021

"Positive Pay" என்னும் புதிய காசோலை சரிபார்ப்பு முறை!

 














     






"Positive Pay செயல்முறை...! - காசோலை மோசடிகளைத் தடுக்க ரிசர்வ் வங்கியின் புதிய பிளான்"


> ஜனவரி 2021 முதல் Positive Pay முறையிலான காசோலை பரிவர்த்தனை முறை அனைத்து வங்கிகளிலும் நடைமுறைக்கு வந்துள்ளது.


> 50,000 ரூபாய்க்கு மேலுள்ள காசோலைகளுக்கு இந்த வசதி கிடைக்கும்.


> 5,00,000 ரூபாய்க்கு மேலுள்ள காசோலைகளுக்கு Positive Pay கட்டாயம்.




வங்கிகளில் காசோலைகள் (Cheques) மூலமாகச் செய்யப்படும் பரிவர்த்தனைகளின் அளவு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.அதே நேரத்தில்,காசோலைகள் தொடர்பான குற்றங்களும்,மோசடிகளும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன.


காசோலைகள் தொடர்பான மோசடிகளைக் குறைக்கவும்,காசோலைகள் மூலம் பணம் செலுத்துவதில் ஏற்படும் முறைகேடுகளைத் தடுக்கவும்,பரிவர்த்தனைகளை மிகவும் பாதுகாப்பானதாக மாற்றவும் 50,000 ரூபாய்க்கு மேல் பணமதிப்பு உள்ள காசோலைகளுக்கு "Positive Pay" என்னும் ஒரு செயல்முறையை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது.


2019 ஆகஸ்ட்டில் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழுவின் (Monetary Policy Committee-MPC) மறுஆய்வுக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.


"Positive Pay" முறை விளக்கம்:


Positive Pay என்பது காசோலைகளின் மோசடியைத் தடுக்கும் மற்றும் மோசடியைக் கண்டறியும் ஒருவகை அம்சமாகும்.இந்த முறையானது வங்கிப் பரிவர்த்தனைகளில் இன்னொரு அடுக்கு பாதுகாப்பை வழங்குகிறது.இந்தப் புதிய அம்சத்தின்படி காசோலை பணமாக மாற்றப்படுவதற்கு (Encash) முன்னர் காசோலை  தொடர்பான அனைத்து தகவல்களும் இருமுறை சரிபார்க்கப்படுகின்றன.










Positive Pay செயல்படும் முறை


* ரூபாய் 50,000 க்கு மேல் மதிப்புள்ள காசோலையை வழங்கும் நபர்,தனது கணக்கு உள்ள வங்கியினை நேரடியாக அணுகியோ,ஏ.டி.எம் மூலமாகவோ,தொலைபேசி - எஸ்.எம்.எஸ் மூலமாகவோ,மொபைல் செயலியிலோ அல்லது இணையதளத்திலோ தன்னால் வழங்கப்பட்ட காசோலை தொடர்பான அனைத்து தகவல்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.


* காசோலையைப் பயனாளிக்கு வழங்குவதற்கு முன்பு அதன் இரு பக்கங்களையும் புகைப்படம் எடுத்து (Optional) அத்துடன் காசோலை எண்,காசோலை தேதி,பணம் செலுத்துபவரின் பெயர்,கணக்கு எண்,தொகை போன்ற தகவல்களையும் தனது வங்கியுடன் பகிர வேண்டும்.


* காசோலை சார்ந்த அனைத்துத் தரவுகளும் வழக்கமான முறையில் (CTS) வங்கியால் சோதிக்கப்படும்.அத்துடன் பயனாளி பகிர்ந்த காசோலை குறித்த தரவுகள் அனைத்துமே Positive Pay முறையிலும் முழுமையாகச் சோதனை செய்யப்படும்.


* காசோலையில் உள்ள மற்றும் அளிப்பவர் பகிர்ந்த தகவல் தரவுகள் பொருத்தமாக இருந்தால் மட்டுமே காசோலைக்குப் பணம் வழக்கப்படும்.


* Positive Pay முறையிலான காசோலை சோதனையில்,தரவுகளில் ஏதேனும் பொருத்தம் இல்லாமல் இருக்கும் போது,காசோலைக்குப் பணம் வழங்குவது நிறுத்தி வைக்கப்படும்.


* வங்கி காசோலை வழங்கிய நபரைத் தொடர்பு கொண்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காசோலையின் உண்மைத் தன்மையினை உறுதிப்படுத்திக் கொள்ளும்.


* இறுதியாகக் காசோலை வழங்கிய நபரின் முடிவின் அடிப்படையில் காசோலைக்குப் பணம் வழங்கப்படும் அல்லது மறுக்கப்படும்.


சிறப்பம்சங்கள்:


# Positive Pay என்பது காசோலை மோசடியைத் தடுக்கப் பயன்படுத்தப்படும் ஒரு தானியங்கி (Automatic) பண மேலாண்மை சேவையாகும்.


# மோசடி,இழப்புகள் மற்றும் பிற குறைபாடுகளுக்கு எதிரான ஒருவரின் காப்பீட்டு வடிவமாக இந்த அம்சம் செயல்படுகிறது.


# Positive Pay அம்சம் சேமிப்புகளை நெறிப்படுத்தவும் மற்றும் மீட்டெடுப்புகளை முறைப்படுத்தவும் செய்கிறது.


# மோசடியைத் தடுக்க இந்த அம்சம் எளிய மற்றும் பயனுள்ள வழியாகும்.


# ஏறக்குறைய 20% பரிவர்த்தனைகள் மற்றும் 80% சதவீதம் பணமதிப்பு Positive Pay அம்சத்தின் கீழ் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


வரம்புகள்:


# 50,000 ரூபாய்க்கு மேற்பட்ட தொகையுடைய காசோலைகளுக்கு இந்த வசதி கிடைக்கும்.வாடிக்கையாளர் விரும்பினால் பயன்படுத்திக் கொள்ளலாம்.


# ஆனால் 5,00,000 ரூபாய்க்கு மேற்பட்ட காசோலைகளுக்கு Positive Pay முறை கட்டாயமாகும்.












Positive Pay முறையின் பயன்கள்:


1)காசோலை பரிவர்த்தனைகளின் போது மோசடிகள் நடைபெறுவதைக் குறைக்கிறது.


2)காசோலையின் பரிவர்த்தனைப் பிழைகள் ஏற்படுவதைத் தடுக்கிறது.


3)வங்கி மற்றும் வாடிக்கையாளர் இடையே நல்லிணக்கத்தினை உண்டாக்குகிறது.


4)வாடிக்கையாளரின் சொத்துமதிப்பு பாதுகாக்கப்படுகிறது.


5)வாடிக்கையாளர் தங்கள் கணக்கின் மீதான கட்டுப்பாட்டை அதிகரிக்கச் செய்கிறது.


6)நிறுவனங்களின் வணிக நடவடிக்கைகள் நெறிப்படுத்தப்படுகின்றன.


7)காசோலைகளின் நல்லிணக்கத்தை மேம்பட்ட தானியங்கி முறைக்கு மாற்றுகிறது.


8)வணிகத்தின் நம்பகத்தன்மையை அதிகரிக்கச் செய்கிறது.


9)கணக்குகளிடையே பரிமாற்றத்தையும், செலுத்துதலையும் எளிதாக்குகிறது.


10)தணிக்கை கட்டுப்பாட்டை மேம்படுத்துகிறது.


11)பரிவர்த்தனை சமநிலையின் துல்லியத்தை மேம்படுத்துகிறது.


13)தள்ளுபடி அபாயத்தைக் குறைக்கிறது.


14)வணிகத்தில் நேரத்தையும்,பணத்தையும் மிச்சப்படுத்துகிறது.


15)வங்கியியலின் நம்பகத்தன்மைையை மேம்படுத்துகிறது.


இந்த Positive Pay போன்றதொரு அம்சத்தை ஐசிஐசிஐ வங்கி 2016 ஆண்டு முதலே செயல்படுத்தி வருவது குறிப்பிடத் தக்கது.இந்திய ரிசர்வ் வங்கி,இந்த வழிமுறை தொடர்பான நிலையான இயக்க நடைமுறைகளை (Standard Operating Procedure-SOPs) நாணயக் கொள்கைக் குழுவின் பரிந்துரைப்படி அனைத்து வங்கிகளுக்கும் அளித்துள்ளது.



ஜனவரி 2021 முதல் Positive Pay முறையிலான காசோலை பரிவர்த்தனை முறை (Cheque Truncation System-CTS) அனைத்து வங்கிகளிலும் நடைமுறைக்கு வந்துள்ளது.







இந்த வசதி போலியான காசோலைகள் மற்றும் தவறான நபர்களிடம் செல்லும் காசோலைகள் போன்றவற்றினால் வாடிக்கையாளருக்கு ஏற்படும் இழப்புகளைத் தடுக்கும் கேடயமாக அமையும் என்று நம்புவோம்!


- அகன் சரவணன்