Mar 25, 2020

தேவை ஒரு பழக்கம்







இன்று மக்கள் வெளியே வருவது முற்றிலுமாக தடை செய்யப்பட்டிருந்தாலும்,குடும்பத்தின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள குடும்பத்தில் ஒருவராவது வெளியே வருவது அவசியமாகிறது.
அவ்வாறு வெளியே வரும்போது சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கவனமாக கடைபிடிக்க வேண்டும்.

இவை நம்மையும் நம் குடும்பத்தையும் நோய் தொற்றிலிருந்து முற்றிலும் விலக்கி வைக்க கூடும்.



ஒரு நபர்:


அடிப்படைத் தேவைக்கான பொருள்களை வாங்குவதற்கு குடும்பத்திலுள்ள வயது வந்த நபர்களில் யாராவது ஒருவர் மட்டுமே தொடர்ந்து வெளியே செல்ல வேண்டும்.
ஆள் மாற்றி மாற்றி வெளியே செல்வதை தவிர்த்துவிடல் வேண்டும்.


ஒரு முறை:


தேவையான பொருள்களை முறையாக திட்டமிட்டு பட்டியலிட்டுக் கொண்டு,ஒரே முறையில் அவற்றை வாங்கி வந்து விட வேண்டும்.ஒரே நாளில் பல முறைகள் என்பதை தவிர்த்து விடல் வேண்டும்.


ஒரு ஆடை:


வெளியே செல்லும்போது ஒரே ஆடையை தொடர்ந்து அணியலாம்.கைகள் மற்றும் கால்களை முழுக்க மூடும்படியான ஆடைகள் சிறந்தது.வெளியே போய்விட்டு வந்த பிறகு  அந்த ஆடையை துவைத்து வெயிலில் உலர்த்தி தனியாக வைத்துக்கொள்ளலாம்.மீண்டும் வெளியே செல்லும் போதும் அதே ஆடையை அணிய பழகலாம்.வீட்டிலுள்ள பிற ஆடைகளுடன் அதனைக் கலக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.





ஒரு பர்ஸ்:


வெளியே செல்லும் போது ஒரே பர்ஸை தொடர்ந்து எடுத்து செல்ல வேண்டும்.வெளியே எடுத்துச் செல்லக்கூடிய அந்த பர்ஸில் உள்ள பணம் மற்றும் நாணயங்களை வீட்டில் உள்ள மற்ற பணம் மற்றும் நாணயங்களுடன் கலந்து விடாமல் அதை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.




ஒரு வாகனம்:



இரண்டு சக்கர வாகனமோ அல்லது நான்கு சக்கர வாகனமோ,நாம் ஒவ்வொரு முறை வெளியே செல்லும் போதும் ஒரே வாகனத்தை மட்டுமே பயன்படுத்தினால் சிறந்ததாக இருக்கும்.



ஒரு பை:


ஒவ்வொரு முறை நாம் வெளியே செல்லும் போதும் வெவ்வேறு பைகளை எடுத்துச் செல்வதை தவிர்த்து,ஒரு குறிப்பிட்ட பையை மட்டும் தொடர்ந்து எடுத்துச் செல்வது சிறந்தது.வீடு திரும்பிய பின்,ஆடைகள் போலவே பையையும் துவைத்து உலர்த்த வேண்டும்.


மேலும் பொருட்கள் அடைக்கப்பட்டுள்ள கவர்களை கவனமாக அப்புறப்படுத்திவிட வேண்டும்.

அவ்வாறே வெளியே செல்லும்போது உடன் எடுத்து செல்லும் பொருட்களை வீடு திரும்பிய பிறகு போட்டு வைப்பதற்கு என தனியாக ஒரு பை வைத்துக்கொள்ள வேண்டும்.அதனை வீட்டு நபர்கள் தொடமுடியாத தூரத்தில் வைத்திருப்பது சிறந்தது.




ஒரு காலணி:


நம்மிடம் பல காலணிகள் இருந்தாலும் இன்றைய சூழ்நிலையில் வெளியே செல்லும்போது ஒரு காலணியை மட்டுமே பயன்படுத்துவது சிறந்தது.அதனை பயன்படுத்தி விட்டு யாரும் தொட முடியாத இடத்தில் தனியாக வைத்திருக்கலாம்.




ஒரு போன்:


வீட்டில் உள்ளவர்களுடன் வெளியே சென்ற நபர் தொடர்பு கொள்ள சாதாரணமான ஒரு கீபேட் போனை பயன்படுத்தலாம்.இந்த போனை அதற்காக மட்டுமே பயன்படுத்திவிட்டு பின் தனியாக வைத்துவிடலாம்.




ஒரு பழக்கம்:


பெற்றோர் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியவுடன் குழந்தைகள் ஓடி வந்து கட்டிப் பிடித்துக் கொள்வது இயல்பு.இன்றைய நாளில் அந்த பழக்கம் மிகவும் தவறானது என்பதை குழந்தைகளுக்கு கூறி புரிய வைக்க வேண்டும்.வெளியே சென்று வந்த நபர் குளித்த பின்தான் அவரைத் தொட வேண்டும் என்பதை குழந்தைகள் மட்டுமின்றி அனைவருமே பின்பற்ற வேண்டும்.



ஒரு நோக்கம்:


இன்றைய சூழலில் நாம் வெளியே செல்வது நண்பர்களுடன் பொழுது போக்கவோ,அரட்டை அடிக்கவோ,நேரத்தை மகிழ்ச்சியாகச் செலவிடவோ அல்ல.நமது குடும்பத்திற்கு தேவையான பொருட்களை சேகரிக்கவே என்ற அடிப்படையான நோக்கத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.அந்த நோக்கத்தை மட்டுமே நிறைவேற்றி கொண்டு முடிந்தவரை விரைவாக வீட்டிற்க்கு திரும்பிவிட வேண்டும்.


-அகன் சரவணன்

Mar 4, 2020

பிட்காயின் தடை நீக்கம் -இந்திய வணிகத்தின் புதிய அத்தியாயம்:






கிரிப்டோகரன்சி மீதான தடை இந்தியாவில் முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது.

கிரிப்டோகரன்சி மீது ரிசர்வ் வங்கி விதித்த தடையை,உச்சநீதிமன்றம் நீக்கியுள்ளது. இதன் மூலம்,பிட்காயின் பரிவர்த்தனை இந்தியாவில் துவங்கும் வாய்ப்பு உள்ளது.


வெர்ச்சுவல் அல்லது மெய்நிகர் நாணயம் என்று அழைக்கப்படும் இந்த கிரிப்டோகரன்சிகளுக்கு முழுமையான தடையை விதித்து இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) 2018 சுற்றறிக்கை வெளியிட்டிருந்தது.இதை எதிர்த்து,
இன்டர்நெட் மற்றும் மொபைல் அசோசியேஷன் ஆஃப் இந்தியா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

பொருளாதாரத்தில் இந்த நாணயங்களின் தாக்கத்தை அளவிட எந்த முன் ஆய்வுகளும் மேற்கொள்ளப்படாததால்,ரிசர்வ் வங்கி கிரிப்டோகரன்ஸிகளை தார்மீக அடிப்படையில்தான் தடை செய்தது.இது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று, வேண்டுகோள்விடுத்தது.

மூன்று நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற பெஞ்ச் வெளியிட்ட உத்தரவில்,2018 ஆம் ஆண்டில் வெளியான ஆர்பிஐ சுற்றறிக்கை நியாயமற்றது மற்றும் ஏற்றத்தாழ்வானது என்று கூறி அதை ரத்து செய்துள்ளது.

பிட்காயின் என்றால் என்ன?

வங்கி சார்ந்த பணப்பரிவர்த்தனைகள் உலகம் முழுக்க இருக்கிறது. நாணயங்கள்,நோட்டுக்கள் பணமாக பயன்படுத்தப்படுகிறது.ஆனால் பிட் காயின் என்பவை டிஜிட்டல் வடிவிலானவை. இவற்றுக்கு நாடு எல்லைகள் எதுவும் கிடையாது.


2009ம் ஆண்டு சட்டோஷி நகோமோடோ என்பவர்தான்,பிட்காயின்,ஐடியாவை அறிமுகம் செய்தவர்.இவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது உள்ளிட்ட எந்த தகவலும் கிடையாது.தற்போது ஒரு பிட்காயினின் மதிப்பு 10,000 டாலர்களை கடந்துவிட்டது. இன்றயை நிலையில்,ஒரு பிட்காயினின், இந்திய ரூபாய் மதிப்பு, 6,42,631.07 என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.


பிட்காயின் என்பது மின்னணு பணமான கிரிப்டோகரன்சி வகைகளில் ஒன்றாகும்.
நீங்கள் வாங்கும் பிட்காயின்களை பல்வேறு இணையதளங்களில் உள்ள வாலெட்களில் சேமித்து வைக்க முடியும்.மைனிங் என்ற நடைமுறையை செய்து முடித்து பிட்காயின்களை வாங்கலாம்,அல்லது உங்களிடமுள்ள பணத்தைக் கொண்டும் வாங்கலாம்.

ஆச்சரிய தகவல் என்றால்,உலகம் முழுவதும் உள்ள 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் பிட்காயின்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இணையதளங்களிலும் பொருட்கள் வாங்கலாம்,விரும்பிய நாட்டின் பணமாகவும் அதை மாற்ற முடியும்.

முற்றிலும் டிஜிட்டல் முறையில் பிட்காயின் வணிகம் நடக்கிறது.எனவே மேற்பார்வை செய்யவோ கட்டுப்படுத்தவோ அமைப்புகள் இல்லை.இதுதான் அச்சத்திற்கு காரணமாகியுள்ளது.எப்படி உயர்ந்ததோ அதேபோல மதிப்பு வீழ்ச்சியடைந்துவிட்டால்,என்ன செய்வது என்ற பயமும் உள்ளது.

இரண்டு நபர்களுக்கிடையிலோ அல்லது இரண்டு கணக்குகளுக்கு இடையேயோ பரிமாற்றம் நடப்பதால்,வங்கி கணக்கு வைத்திருக்க வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது.கட்டற்ற சுதந்திரம்தான் இந்த வகை வணிகத்தின் நன்மையும்,தீமையும்!

பார்க்கலாம்! இந்திய சந்தையில் இந்த பிட்காயினின் ஆதிக்கத்தை.