Jan 9, 2020

நேற்று! இன்று!! நாளை?

ஒரு ஊரில் ஒரு அரசன் இருந்தானாம்! அவன் தன் குடிமக்களிடம் ஒரு மூட்டை நெல் கொடுத்து ஒரு மூட்டை அரிசி கேட்டு கட்டாயப்படுத்துவானாம்!நெல்லைப் பிரித்து எடுக்கும் போது பாதி மூட்டை உமியாகப் போய் விடுவதால்,மக்கள் கைக்காசு போட்டு பாதி மூட்டை அரிசி வாங்கி,ஒரு மூட்டை அரிசியாக அரசனிடம் கொடுப்பார்களாம்!

அரசவையில் பரிசுகொடுப்பது போலக் கொடுத்து பின்னர் தன் வீரர்களை மாறுவேடத்தில் அனுப்பி அவற்றைக் கவர்ந்து கொள்வானாம்!

அரசு கஜானா செல்வத்தை மக்கள் நலத்திட்டங்கள் எனும் பெயரில் தன் வாரிசுகளின் பெயர்களுக்கு மாற்றிவிடுவானாம்!


வெளிநாடுகளில் இருந்து பொருட்களைக் குறைந்த விலைக்கு வாங்கி,தம் குடிமக்களிடம் அதிக விலைக்கு விற்பானாம்!

இத்தகைய  செயல்பாடுகளால் அவனை மோசமான அரசன் என்று மக்கள் தூற்றினார்களாம்!


ஒரு நாள் மரணப்படுக்கைக்குச் சென்ற அரசன்,அடுத்து அரசனாக இருக்கும் தன் மகனிடம் "தனக்கு மக்களிடம் எப்படியாவது நல்ல பெயர் கிடைக்கச் செய்ய வேண்டும்" என்ற வேண்டுகோளுடன் இறந்து விட்டானாம்!


அடுத்து அரசனான மகன்,மக்களிடம் ஒரு மூட்டை உமி மட்டும் கொடுத்து,ஒரு மூட்டை அரிசி கேட்டானாம்.மக்கள் முழு மூட்டை அரிசியும் காசு போட்டு வாங்கிக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாம்!


இந்த அரசனது வீரர்கள் மக்கள் பணத்தை வரி எனும் பெயரில் நேரடியாகவே கொள்ளை அடித்தார்களாம்!

அரசு கஜானாவில் இருந்த செல்வத்தை எடுத்து நாட்டின் பெரிய பணக்கார்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்தானாம்!

உணவுப் பொருள்கள் உள்ளிட்ட பெரும்பாலான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு மிக மிக அதிக விலைக்கு விற்கப்பட்டனவாம்!

இவற்றையெல்லாம் பார்த்த மக்கள் "இவனை விட இவன் தந்தை சிறந்தவன் என்றும்,மகனை விட தந்தை நல்லவன்" என்றும் கூற ஆரம்பித்தார்களாம்!

இவ்வாறு தந்தையின் கடைசி ஆசையை மகன் நிறைவேற்றினானாம்!


முக்கியக்குறிப்பு:

இந்தக் கதையை நேற்றைய மற்றும் இன்றைய ஆட்சிகளுடன் தொடர்புபடுத்த வேண்டாம் மக்களே🙂

- அகன்சரவணன்

No comments:

Post a Comment