Jan 9, 2020

ஸ்பேர் வீல் ஸ்டெப்னி ஆன கதை

சாதாரணமாக ஸ்டெப்னி என்று அழைக்கப்படும் ஸ்பேர் வீல்கள் வாகனங்கள் உருவான போது தயாரிக்கப்படவில்லை.அக்காலத்தில் குதிரை வண்டிகள் ஏராளமாகப் புழக்கத்தில் இருந்தன.அவை செல்லக் கூடிய தரத்திலேயே சாலைகளும் இருந்தன.மேலும் ஓடும்போது  குதிரைகளின் நகங்களும் சாலைகளில் ஆங்காங்கே விழுந்தன.

குதிரைகளின் நகங்கள் குத்தி வாகனங்கள் அடிக்கடி பஞ்சர் ஆகின.வாகனங்கள் வந்த புதிதில் இது பெரும் பிரச்சனையாக உருவெடுத்தது.மேற்கத்திய அரசுகள் இதனைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தன.குதிரைகள் மற்றும் குதிரை வண்டிகள் வைத்துக்கொள்ள கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.அரச குடும்பங்கள் செல்லும் பாதைகளின் ஓரம் வரிசையாக அடிமைகள் நிறுத்தப்பட்டு சாலைகளைப் பெருக்கச் செய்து கார்களின் சக்கரங்கள் பஞ்சர் ஆவதைத் தடுக்க முயற்சிகள் எல்லாம் மேற்கொள்ளப்பட்டன!

ஆயினும் இது உடனே சரிசெய்ய முடியாத பிரச்சனையாகவே இருந்து வந்தது.வால்டர் மற்றும் டாம் டேவிஸ் சகோதரர்கள் இந்தப் பிரச்சனைக்கு புதிய முறையில் தீர்வு கண்டனர்.ஆம்.அவர்கள் வாகனங்களின் டயர்கள் பஞ்சர் ஆனால் மாற்றுவதற்கு என்று ஸ்பேர் வீல்களைத் தயாரித்து விற்க ஆரம்பித்தனர்.


இங்கிலாந்தின் இலண்டன் நகரில் இருந்த  ஸ்டெப்னி எனும் தெருவில் வால்டர் டேவிஸ் மற்றும் டாம் ஆகியோர் ஸ்பேர் வீலை முதன்முதலில் தயார் செய்து விற்றதால் தெருவின் பெயரான ஸ்டெப்னி என்பதே ஸ்பேர் வீலுக்கு வைக்கப்பட்டது!அவர்களது நிறுவனத்தின் பெயர் ஸ்டெப்னி அயன் மாங்கர்ஸ்!

ஸ்டெப்னி நிறுவனம் வேகமாக வளர ஆரம்பித்தது.
ஸ்டெப்னி வீல் வாகன உரிமையாளர்களிடம் பிரபலம் அடைந்தது.அதனால் வாகன உற்பத்தி நிறுவனங்களே வாகனங்களில் ஸ்பேர் வீலை பொருத்தி வழங்க ஆரம்பித்தன. அதற்கான பெயர் ஸ்டெப்னி என்பதாகவே மாறியது.

இரப்பர் தட்டுப்பாடு காரணமாக வாகனங்களில்  ஸ்டெப்னி பொருத்துவதற்கு இரண்டாம் உலகப்போர் சமயத்தில் தடை விதிக்கப்பட்ட வரலாறும் உண்டு! 
 

இந்தியா இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் இருந்த காரணத்தால்,ஸ்டெப்னி தயாரிப்பு நிறுவனம் இந்தியாவில் எளிதாக நுழைந்தது.
இந்தியாவிலும் ஸ்பேர் வீல் ஸ்டெப்னி ஆனது.


வல்லவனுக்கு வல்லவன் வையத்தில் உண்டு என்பது போல மேற்கத்திய நாடுகளில் மோட்டார் வாகனங்களில் ஸ்டெப்னி வருவதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்பே தமிழர்கள் தேர்ச்சக்கரங்களுக்கு ஸ்டெப்னி வைத்திருந்ததை புறநானூற்றுப் பாடல் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது!


ஸ்டெப்னி குறித்த புறநானூற்றுப் (102) பார்வை:

"கீழ் மரத்து யாத்த சேம அச்சு அன்ன"

-ஒளவையார்

சக்கரம் பழுதடையும் பொழுது பயன்படுத்துவதற்காகக் கூடுதலாக வண்டியில்  சேமத்திற்காக - பாதுகாப்பிற்காக- இணைக்கப்படுவதே சேம அச்சு.இத்தகைய சேம அச்சு போன்று மக்களுக்கு இடர் வரும் பொழுது அதனைக் களையும் சேம அச்சாக மன்னன் விளங்குகின்றான் என்கிறது ஸ்டெப்னி குறித்து சங்ககால புறநானூற்றுப் பாடல்!

- அகன்சரவணன்

No comments:

Post a Comment