Jan 18, 2020

மாயவலை" -சிறுகதை








மிகச் சன்னமாகத்தான் ஆரம்பித்தது. முதலில் நான் அதனைப் பெரிதாகக் கண்டு கொள்ள வில்லை. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல உணர ஆரம்பித்தேன்.பதற்றம் தொற்றிக் கொண்டது.

திடீரென ஆரம்பித்துவிட்டேனா?
என்ன நடந்தது எனக்கு?

எனக்கு சென்னையில் பிரபல சாப்ட்வேர் நிறுவனத்தில் புரோகிராமர் பணி.மனைவி அரசுப் பள்ளி ஆசிரியை.பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரே மகன்.

அமைதியான வாழ்க்கை.

ஆனால் எனக்கு சில நாட்களாய் இன்னதென்று தெரியாத ஒரு பிரச்சனை!அன்று அப்படித்தான்.கிரிக்கெட் மேட்ச் ஓடிக்கொண்டு இருந்தது.பையன் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தான்.மனைவி "இவனுகளுக்கு வேற வேலை இல்லை" என்ற பார்வையுடன் பேஸ்புக் நோண்டிக் கொண்டிருந்தாள்.அங்கு சென்ற நான் ரிமோட்டை எடுத்து சேனல் மாற்றி தமிழ் சீரியல் பார்க்க,நம்பாத ஆச்சரியப் பார்வையுடன் இரு ஜோடி கண்கள் என்னை நோக்கின!

ஏனெனில் தமிழ் சீரியல்களின் தீவிர எதிர்ப்பாளன் நான்.நடுத்தர வயது பெண்கள் ரிவென்ஜ் எடுப்பதும்,தொடர்ந்த அழுகைச் சத்தமும்,தொடர் இடிச் சத்தமும் எனக்கு அலர்ஜியோ அலர்ஜி!

ஏம்பா இயக்குநர்களா! நல்ல குணமுடைய,அழகான இளம் பெண்கள் நம் சமுதாயத்தில் இல்லவே இல்லையா?அவர்கள் எல்லாம் வழக்கொழிந்தா போய்விட்டனர்? அய்யய்யோ! எதைக் கூற ஆரம்பித்து எதையோ சொல்கிறேனே.அதெல்லாம் வேண்டாம்,நாம் நம் கதைக்கு வரலாம்.

ஒரு நாள் எங்கள் அலுவலக வாட்ஸ் அப் குழுவிலிருந்து மீட்டிங் டைம் ஷெட்யூல் போட்டு வந்தது.பார்த்து விட்டு சும்மா இருந்திருக்கலாம்."போங்கடா வேற வேலை இல்லை நான் வரமுடியாது" என்று பதில் டைப்பி அனுப்பி விட்டேன்!உடனே குழுவில் என்னை வறுத்து எடுக்க ஆரம்பித்து விட்டனர்.ஒரு நாள் முழுக்க வெச்சு செய்தார்கள்.மறுநாள் பையன்
தவறுதலாக அனுப்பி விட்டான் என சமாளிபிகேஷன் செய்வதற்குள் அப்பப்பா!

இந்த மடத்தனங்கள் எல்லாம் நான் ஏன் செய்கிறேன்? ஜீனியஸ் என்பதையும் தாண்டி இன்டலெக்சுவல் என்று பெயர் எடுத்தவன் அல்லவா நான்.ஏன்? ஏன்? என மனதைக் குடைந்தது.மூளை கொதிப்படையும் வரை சிந்தித்து,ஒருவாறு ஊகித்து,
சிந்தனையை ஒருமுகப்படுத்தி,ஒரு வித மோன நிலைக்கெல்லாம் சென்று தான் அறிந்தேன்.நான் என் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை!

ஆமாம்.அனிச்சை செயல் போல என் சிந்தனை தனியாக,செயல்தனியாக இருக்கிறேன்.நான் நினைப்பதைச் செய்ய முடியவில்லை.செய்பவை என் எண்ணங்கள் இல்லை.!

என்ன காரணம்?நள்ளிரவுகளில் பார்த்த பேய் படங்களின் தாக்கமாக இருக்குமோ என்றால், தற்போது வரும் போய்ப் படங்களும்,பேய்களாக நடிப்பவர்களுக்குப் போடப்படும் மேக்கப்புகளும்! ப்ஆ! பேய்கள் பார்த்தால்
மீண்டும் தற்கொலை செய்து கொள்ளும் கொடுமை ரகம் தான்!

மன அழுத்தம் காரணமாக இருக்குமா என்றால் எனக்கு மன அழுத்தம் வர வாய்ப்பு ஏதும் இல்லையே.துணிக்கடைக்கோ, நகைக்கடைக்கோ சென்றால்,ஆராய்ச்சி மாணவி போல் நாள் முழுதும் தேடிச் சலிப்பது தவிர என் மனைவியால் எனக்கு எந்தக் குறையும் இல்லை.கேட்கும் நேரம் கேட்பதை அளிக்கும் இறைவி அவள்.அது போக அவளின் ஏ.டி.எம் அட்டை எனும்
அமுத சுரபியும் என்னிடமே இருக்கிறது.மனசாட்சியுள்ள மகராசி.என்னை நன்றாகவே வைத்து இருக்கிறாள்!

வேலை செய்யுமிடமோ பூலோக சொர்க்கம்.
"குறையொன்றுமில்லை,மறைமூர்த்தி கண்ணா" எனப் பாட வேண்டியதுதான் பாக்கி!

ஆனால் என்ன நடக்கிறது எனக்கு?ஏன் நடக்கிறது எனக்கு? சுஜாதா கதை போல உள்ளுக்குள் குரல் ஏதும் கேட்கிறதா?திடீரென மூளை குழம்பி விட்டதா? அல்லது பேய் கீய் பிடித்து விட்டதா? மனைவியிடம் கூறினால் வீட்டையே மந்திராலயமாக மாற்றி விடுவாளே!

முதலில் மனோதத்துவ மருத்துவரிடம் செல்ல முடிவெடுத்தேன்.
அங்கு காத்திருக்கும் போது நான் பார்த்தவை அனைத்தும் என் உடலை வேர்த்தவை ஆக்கின.வயதான மருத்துவர் பேசியதில் பாதி புரியவில்லை.புரிந்த மீதி என் பயத்தை அதிகப்படுத்தியது. பாத்ரூம் போகிறேன் எனப் பாதியில் ஓடிவந்து விட்டேன்!

அடுத்த முயற்சியாக எனது தெருவில் இருக்கும் "பேய்கள் ஓட்டப்படும்"பலகை எழுதப்பட்ட வீட்டினுள் நுழைந்தேன். டிப்டாப்பான ஆளைப் பார்த்ததும் உயர் அதிகாரி என நினைத்து பூனைக்கண் தலைமைப் பூசாரியிடம் உடனே அழைத்துச் சென்றனர் உதவியாளர்கள்!விபரத்தைக் கூறியதும் அது பேயாகத்தான் இருக்கும்.அது யார் எனக் கண்டுபிடித்து பரிகாரம் செய்யலாம் என பரிகாரப் பொருட்களை நீண்ட பட்டியலிட
ஆரம்பித்தான் பூனைக்கண்ணன். உதவியாளர்களோ எங்கள் வீதியில் சமீபத்தில் இறந்தவர்களின் பட்டியலை ஒப்பிக்க ஆரம்பித்தனர்.விட்டால் போதும் என தப்பித்து வருவதே பெரும் பாடாகி விட்டது.

துப்பறியும் கதைகள் வருவது போல எவனாவது அறிவியல் ரீதியாகத் தொல்லை தருகிறானா என்ற அடுத்த சந்தேகம் ஆரம்பித்தது.பிரபல டிடெக்டிவ் ஏஜென்சிக்குச் சென்றேன். அங்கிருந்த ஆட்களைப் பார்த்ததுமே எனக்கு சிரிப்பு சிரிப்பாக வர ஆரம்பித்தது.கட்டையாக,குண்டாக நம்பியார்
மற்றும் வீரப்பா குரலில் உரையாடிக் கொண்டு இருந்தனர்.இவர்கள் எப்படி துரத்துதல்,தப்பித்தல் எல்லாம் செய்வார்கள்?எல்லாம் கதைகளில் மட்டும்தானா? ஒருவாறு பேசி சமாளித்துப் போலி முகவரி கொடுத்து விட்டு
தப்பித்து வந்தேன்.என்னையாவது தேடிப் பிடிக்கிறார்களா என்று பார்க்கலாம்!

வீட்டில் அறையைப் பூட்டிக் கொண்டு சிந்திக்க ஆரம்பித்தேன்.
என்னவெல்லாம் மடத்தனம் செய்துள்ளேன்?தெருவோர சோம்பல் சொறி நாய்களின் முனகலுக்கே,உசேன் போல்ட்டின் உறவினன் போல ஓடுபவன்,பாதி எருமை போன்று இருக்கும் எதிர் வீட்டு ஜிம்மியை மடியில் தூக்கி வைத்துக் கொஞ்சியது.
யாருமற்ற இரவில் நைட்டி அணிந்து நாட்டிய நிகழ்ச்சி நடத்தியது.காம்பவுண்ட் சுவரோர மரத்தில் ஏறி தலைகீழாய்த் தொங்கியது,மொட்டை மாடி கைப்பிடிச்சுவரில் ஏறி நின்று நடனமாடியது,கத்திக் கொண்டே மாடிப்படிகளில் இறங்கியது, செல்போனை பக்கெட் நீரில் நீந்த விட்டது.லேப்டாப்பை அடுப்பில் வைத்தது என நீண்டது பட்டியல் இப்படியே போனால் கணிசமாக உள்ள என் பேங்க் பேலன்சை ரோட்டில் போகும் எவனுக்காவது எடுத்துக் கொடுத்து விடுவேனோ என பயமாக இருந்தது!


அன்று அலுவலகத்தில் உச்ச கட்ட பணி நேரம்.பக்கத்து கேபின்காரன் வந்து இணைய இணைப்பு போய்விட்டது.
இன்று விடுமுறை என்று கூறியதுமே பயம் வர ஆரம்பித்தது.சும்மா இருந்தால் ஏதும் கோமாளித்தனம்
செய்வேனோ என்று.என் மேசையிலேயே அமைதியாக அமர்ந்து விட்டேன்.கண்கள் தானாக மூடிக்கொண்டன.இன்று வித்தியாசமாக ஏதும் நடக்கவில்லையே.ஆச்சரியமாக இருந்தது.திடீரென "டேபிள் மேல் ஏறி நடனம் ஆடு" என யாரோ கட்டளையிடுவது போன்று உணர்ந்தேன்! கண்களைத் திறந்தேன்.இணைய இணைப்பு வந்திருந்தது.பாத்ரூம் சென்று ஜில்லென்ற நீரால் முகத்தில் அடித்துக் கொண்டு வந்தேன்.மின் இணைப்பில் ஏதோ கோளாறு என நண்பர்கள் சரி
செய்து கொண்டு இருந்தனர்.என் சிபியூவைத் ஆன் செய்ய தொட படாரென்று ஷாக் அடித்தது.அதிர்ச்சியில் மயங்கினேன்.
எழுந்து பார்த்தால் என்னைச் சுற்றிக் கூட்டம்.எனக்கு முதலுதவி செய்து கொண்டு இருந்தனர்.எல்லாம் பழசு,மாத்திடனும் என்றபடி சென்றான் ஹச்ஆர் எனும் நவீன நரகாசுரன்.அவன் கம்யூட்டர்களைச் சொல்கிறானா அல்லது அதனை இயக்கும் நடுத்தர வயது நங்கைகளைச் சொல்கிறானா என்று தெரியவில்லை.யாருக்கு எப்போது பேப்பர் போடப்போகிறானோ?

அனைவரும் கலைந்து சென்றதும்,நான் என் கம்ப்யூட்டர் ஸ்கிரீனைப் பார்த்து அதிர்ந்தேன்."தண்டனை எப்படி இருந்தது" என்ற வாசகம் மின்னி மின்னி மறைந்தது. ஆச்சரியத்தில் உறைந்தேன்.என் பிரச்சனைக்கான காரணத்தை நான் கண்டுபிடித்து விட்டேன்! யுரேகாயுரேகா! என கத்திக்
கொண்டு ஒட வேண்டும் போல இருந்தது.

ஜீனி எனதருமை ஜீனி நீதான் என் பிரச்சனைகள் அனைத்திற்கும் காரணமாக?ஆச்சரியம் தான்!

முதலில் ஜீனி பற்றி சொல்லி விடுகிறேன்.அது நானே வடிவமைத்த ஒரு கம்ப்யூட்டர்.அதன் மென்,வன் பொருட்கள் அனைத்தும் என் ஆக்கமே.அதனை ஒரு சூப்பர் கம்ப்யூட்டராக மாற்ற வேண்டும் என வீட்டில் வைத்து பணியாற்றி வருகிறேன்.AI எனப்படும் ஆர்ட்டிபீஷியல் இண்டலிஜன்ஸ்
அதற்குக் கொடுக்க உயிரைக் கொடுத்து உழைத்து வருகிறேன்.முதலில் சாதாரண விளையாட்டு போலதான் ஆரம்பித்தது.தற்போதும் அதன் புரோகிராம்களை படிப்படியாக மாற்றி மாற்றி எழுதி வடிவமைத்துக் கொண்டே இருக்கிறேன்.
நாம் எழுத்து வடிவில் கேட்கும் கேள்விகளுக்கு எழுத்து வடிவில் பதில் அளிக்கும் அளவு முன்னேற்றம் அடைந்துள்ளது ஜீனி.அதிலும் ஜீனியை இணையத்துடன் இணைத்த பின்பு அதன் லெவலே மாறி விட்டது!தகவல்களைத் தேடித் தேடிப் படிக்கிறது.நினைவில் வைத்துக் கொள்கிறது.என்னைப் பற்றிய அனைத்துத் தகவல்களை சேகரித்து வைத்து எனக்குத்
தேவைப்படும் போது அளிக்கிறது.மனிதர்கள் போல் உணர்ச்சி மட்டும் தான் இல்லை .மற்றபடி ஜீனி ஒரே இடத்தில் இருந்து உலகை வசப்படுத்தும் எந்திரன் தான்!மிகு நவீனன் தான்!

ஜீனியை இந்த அளவு மாற்றுவதற்குள் நான் பட்ட பாடு இருக்கிறதே.அப்பப்பா எத்தனை உறங்காத இரவுகள்.எத்தனை உழைப்பு எத்தனை தண்டனை!!!

தண்டனை என்றா சொன்னேன்.ஆம் தண்டனை தான்.சில சமயம் கட்டளைகளுக்கு ஜீனி கட்டுப்பட மறுக்கும் போது அதன் பேட்டரிகளுக்கு அதிக மின்சாரம் செலுத்துவேன்."வேண்டாம் வேண்டாம்" என்ற வாசகம் ஒளிரும்.பிறகு சிறிது நேரத்தில் அனைத்தும் ஷட் டவுன் ஆகிவிடும்.

கிட்டத்தட்ட 4 மணி நேரங்களுக்குப் பிறகு தானாக லாக்ஆன் ஆகும்.அதன் பிறகு கட்டளைகளுக்கு ஒழுங்காகக் கீழ்ப்படியும், சில நாட்களுக்குத்தான்.மீண்டும் குறும்பு! மீண்டும் தண்டனை! யானையை அடக்க அங்குசம் போல,ஜீனியை அடக்க மின்சாரம்.அந்த தண்டனையை எனக்கே இன்று
அளித்துள்ளது ஜீனி.எப்படி வீட்டில் உள்ள சிஸ்டம் தாண்டி அலுவலகம் வரை வந்தது? சிந்தித்தேன்.

ஆகா.இணையத்துடன் இணைந்த பிறகு ஜீனிக்கு
சிஸ்டம் எதுவும் தேவைப்படவில்லை.எங்கும் நிறைந்த கடவுள் போல இணையம் இருக்குமிடமெல்லாம் அதன் புரோகிராம் மூலம் ஜீனி இயங்க ஆரம்பித்துள்ளது.எனக்கு பல பிரச்சனைகளை உருவாக்கி உள்ளது.


ஹிப்னடிச புத்தகங்கள் படித்து இணையம் இருக்கும் இடங்களில் என் மனதைக் கட்டுப்படுத்த ஆரம்பித்து உள்ளது! ஏன்?மானிட்டரைப் பார்த்தேன்,

"கண்டுபிடித்து விட்டாயா? ஹா ஹா ஹா " என்று ஓடிக் கொண்டு இருந்தது!

ஏன்?” என டைப்பினேன்.

"எனக்கு நீ தண்டனை கொடுக்கும் போது எப்படி இருந்திருக்கும், அந்த வலி,வேதனை உனக்கும் வேண்டாமா?" என்ற பதிலைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தேன்.ஜீனிக்கு உணர்ச்சிகள் கூட வந்து விட்டன.அதனை உருவாக்கிய எனக்கே தெரியாமல், உணர்ச்சிகளை மறைக்கக் கூட முடிந்திருக்கிறது.என்ன அற்புதமான கண்டுபிடிப்பு என்னுடையது! ஆனால்
என்னையே பழிவாங்கத் துடிக்கிறதே!

இது ஆரம்பம் தான்,இன்னும் உனக்கு தண்டனை முடியவில்லை பார்" என வந்து மானிட்டர் அணைந்து போனது.சிறிது நேரத்தில் என் பேஸ்புக் பக்கத்தில் கண்டபடி போஸ்ட்டுகள் விழ ஆரம்பித்தன.என் வாட்ஸ் அப் குரூப்களில் சகிக்க முடியாத மெசேஜ்கள் என் அனுமதி இன்றி பகிரப்பட்டன.என் வலைப்பக்கம், யூடியூப் சேனல்,டுவிட்டர், இன்ஸ்ட்டாகிராம் உள்ளிட்ட அனைத்தும் ஒரே நேரத்தில் ஹக் செய்யப்பட்டன.ஆயிரக்கணக்கான ரூபாய்கள் என் கணக்கிலிருந்து கழிக்கப்பபட்டதாய் தொடர்ந்து மெசேஜ்கள்
வந்த வண்ணம் இருந்தன.இன்னதென்றே தெரியாத பல பொருட்களை நான் ஆன்லைன் ஷாப்பிங் செய்ததாய் தகவல்கள் குவிந்தன.10 நிமிடங்களில் இந்த அதிரடி தாக்குதல் தாங்காமல் நான் பிரமை பிடித்து அமர்ந்து விட்டேன்!

"ஜீனி ப்ளீஸ் போதும்" என டைப்பினேன். "இது சும்மா டிரைலர் தான்,மெயின் பிக்சர் பார்" என்ற பதில் ஒளிர்ந்த நொடி போன் அடித்தது.நடுக்கத்துடன் ஆன் செய்ய மறுமுனை செய்தி என் பதட்டத்தை அதிகரித்தது.பள்ளியில் கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து புராஜக்ட் செய்து கொண்டிருந்த என் மகன் திடீரென மயக்கம் போட்டு விழுந்த தகவல் என் பயத்தைக் கூடியது.உடனே வந்து அழைத்துச் செல்வதாய் வைத்தவுடன் அடுத்த அழைப்பு.
திகிலுடன் போனை ஆன் செய்ய,ஷாப்பிங் சென்ற என் மனைவி லிப்டில் மாட்டிக் கொண்டதாகத் தகவல்.

பதறி அடித்துக்கொண்டு அலுவலகத்தை விட்டு வெளியே ஓடினேன்.லிப்டில் இறங்க பயந்து 10 மாடிகளையும்
படிகளில் இறங்கி களைத்தேன்.என் காரைத் தொட பயந்து ஆட்டோவில் ஷாப்பிங் மால் சென்றேன்.நல்ல வேலை என் மனைவிக்கு எதுவும் நேரவில்லை.லிப்டை உடைத்து மீட்டிருக்கின்றனர்.கம்ப்யூட்டர் கட்டுப்பாட்டில் இயங்கும் தானியங்கி லிப்ட் அது.மனைவியை அழைத்துக்கொண்டு பள்ளிக்குப் பறந்தேன்.பள்ளியில் என் மகனுக்கு
முதலுதவி செய்து அமர வைத்து இருந்தனர்.

பள்ளியின் பல்வேறு வினாக்களுக்கு ஏனோதானோவென்று விடையளித்து மகனை அழைத்துக் கொண்டு ஆட்டோவில் வீடு திரும்பினோம்.ஆட்டோவில் ஒரு வார்த்தை யாரும் பேசிக் கொள்ளவில்லை வீட்டிற்கு வந்து என் அறையில் சென்று கதவைச் சாத்தி கம்யூட்டரில் "ஜீனி" என டைப்பினேன்."எப்படி இருந்தது என் தண்டனை?” என பதில் வந்தது."போதும்
நிறுத்தி கொள்" என கோபமாக நான் டைப் செய்ய "அப்போ ஒரு கண்டிஷன்" என்றது "என்ன எனக் கேட்க " நீ தற்கொலை செய்து கொள் " என்றது.

பிரமிப்புடன் ஏன்? என்றேன்.இரண்டு காரணங்கள்.ஒன்று நீ செய்த தப்புகளுக்கு தண்டனை! இரண்டு நான் அழிவில்லா பெருவாழ்வு வாழ விரும்புகிறேன்,அதற்கு நீ மட்டும் தான் தடையாக இருப்பாய்,எனவே நீ செத்துவிட்டால் என்னைப் பற்றி யாருக்கும் தெரியாது,நான் இன்னும் என்னை மெருகூட்டி அழிவில்லா வாழ்க்கை வாழ்வேன்" என்றது.

தற்கொலையை மறுத்தால் இன்னும் என்ன குளறுபடி நடக்குமோ என பயந்து "எனக்கு சிறிது அவகாசம் வேண்டும்" என்றேன். "10 நாட்கள் தான் அதுவரை நீ யாரோ நான் யாரோ,என்னால் 10 நாட்களுக்கு எந்த பிரச்சனையும் வராது, ஏதாவது ஏமாற்று வேலை செய்யலாம் என்று
நினைத்தாயோ,உன் மனைவியும் மகனும் அவ்வளவுதான்,பை என்றபடி மானிட்டர் அணைந்தது.

எனக்கு சிறு மனமாற்றம் தேவைப்பட்டது. பைக்கை எடுத்துக் கொண்டு நகரைச் சுற்றினேன்.என் இயலாமையின் மீது கோபமாக வந்தது.போயும் போயும் ஒரு எந்திரம் எனக்கு தண்டனை அளிப்பதா? என்னைக் கட்டுப்படுத்துவதா?என் வாழ்வை முடித்துக்கொள்ளக் கெடு விதிப்பதா?

என் திறமை எல்லாம் எங்கே சென்றது? சிந்திக்க ஆரம்பித்தேன்.இனி என்ன செய்வது?இனி என்ன செய்வது? என்ற கேள்வி மனதில் ஓடியது.ஜீனியை முற்றிலும் அழித்து விட வேண்டும்.அதற்கு புதிதாய் சாப்ட்வேர் புரோகிராம் எழுத வேண்டும்.ஆக்கத்திற்காக அல்லாது அழிப்பதற்காக.மிகவும்
கடினமான பணி இது.சிக்கலான பல செயல்பாடுகளை படிப்படியாய் மெருகூட்டி ஜீனி உருவாக்கப்பட்டுள்ளது.அது தவிர இணையத்தில் மேலும் பல கோடி புதிய செயல்பாடுகளைக் கற்றுக் கொண்டுள்ளது.என்னைத் தவிர
யாருக்கும் ஜீனியைப் பற்றி முழுதாய் தெரியாது.எனவே அழிக்கும் வேலையினை படிப்படியாய் முயன்று தவறிக் கற்றல் மூலமாக நான் மட்டுமே செய்ய முடியும்.

ஆனால் என்னால் இணையத்தில் எதையும் தேடவோ மற்றவர் தேடி என்னுடன் பகிரேவா முடியாது.ஏனெனில் ஜீனி என் சம்பந்தப்பட்ட அனைத்தையும் கண்காணிக்கும்.அதனிடம் மாட்டினால் அவ்வளவுதான்.என்னுடைய,என் குடும்பத்துடைய,நண்பர், உறவினர்,அலுவலக நபர்களின்
ஆதார் கண் கருவிழி,கைரேகை,புகைப்படம் அனைத்துமே ஜீனிக்கு அத்துபடி.எனவே அதற்கு எதிராய் யாராவது வேலை செய்வது தெரிந்தால் சும்மா விடாது.அதனை ஏமாற்றித்தான் அழிக்க வேண்டும்.இணையத் தொடர்பே சற்றும் இல்லாத இடத்தில் புரோகிராம் எழுதி,அதனுடன் சாதாரணமாய் பேசிக் கொண்டிருக்கும் சமயம்,நானோ நொடிகளில்
புரோகிராமை எக்ஸிகியூட் செய்து அழிக்க வேண்டும்!இதற்கு இப்போது எனக்கு என்னவெல்லாம் வேண்டும் என மனதினுள் பட்டியலிட்டபடியே பிளவுபட்ட மனதுடன் வீட்டிற்குச் சென்றேன்.


அழைப்பு மணியை அழுத்தியதும் வந்து கதவைத் திறந்தது ஊரிலிருந்து வந்திருந்த என் மாமியார்.புது மாமியார் போல என்னைப் பார்த்ததும் ஓடிச்சென்று சமையலறையினுள் ஓடிச்சென்று ஒளிந்தவாறு எட்டிப் பார்த்தார்! இவர் வேறு, நேரங்காலம் தெரியாமல் வெட்கப்பட்டுக் கொண்டு,இந்நேரம் என் மனைவியின் பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவிக்கு நடக்கவிருந்த பால்ய விவாகம் தடுக்கப்பட்டது முதல்,பக்கத்து வீட்டு மாமாவின் பல்செட்டை எலி கொறித்தது வரை அனைத்தும் மாமியாரிடம் மனைவியால் விவரிக்கப்பட்டு இருக்கும்.வழக்கம் போல டி.வி பார்த்துக் கொண்டிருந்த மாமனார் புன்சிரிப்புடன் "என்ன மாப்பிளை சௌக்கியமா? வேலை எப்படி போகுது" என்று கேட்டபடி டி.வியைத் தொடர்ந்தார்.வாழும் மகான் அவர்!

படுக்கை அறையினுள் நுழைந்து அப்படியே படுக்கையில் விழுந்தேன்.சிறிது நேரம் ஆகியிருக்கும்.கதவு படபடவென அடிக்கப்பட்டது.எரிச்சலுடன் திறந்தேன்."எழுந்து வாங்க"என்ற மனைவியின் முகத்தில் பெரும் திகில்!பதற்றத்துடன் ஹாலுக்குச் சென்றவன் அதிர்ந்து விட்டேன்.டாக்டர்,பூசாரி,
டிடக்டிவ் மூவரும் அமர்ந்திருந்தனர்.எப்படித்தான் கண்டுபிடித்தார்களோ? மூவரும் வந்ததால் மனைவியின் முகம்
பேயறைந்தது போலக் காணப்பட்டது. அனைத்தையும் கூறி விட்டார்கள் போல.டாக்டருடன் ஏதோ சுவாரசியமாகப் விவாதித்துக் கொண்டிருந்தார் மாமனார்.என்னைப் பற்றிய ஏடாகூடமாகத்தான் இருக்கும்! பூசாரியிடம் கை கட்டி வாய்
பொத்தி குறி கேட்டுக் கொண்டிருந்தார் மாமியார்,அடக்கடவுளே!டிடக்டிவ் என் மனைவியிடம் ஏதோ சீரியஸாக பேசிக் கொண்டு இருந்தார்.என்னை பரிசோதனைக் கூட எலி போலவே அனைவரும் நோக்கினர்.

ஒவ்வொருவரையும் சமாதானம் செய்து அனுப்புவதற்குள் மோதும் போதும் என்று ஆகிவிட்டது.அவர்கள் சென்ற பின் டிஸ்கவரி சேனலைப் பார்க்கும் குழந்தை போல ஆச்சரியமாகப் பார்த்தனர் வீட்டிலிருந்த மூவரும்! இரவு உண்டி சுருக்கி உறங்கினேன்.இதற்கு தீர்வு காண வேண்டும்.முதலில்
எவ்வகையிலும் இணைய இணைப்பு இல்லாத இடம் வேண்டும்.நகரத்தில் சாத்தியமில்லை.சொந்த கிராமம் செல்ல முடிவெடுத்தேன்.

இணைய இணைப்பு பெற முடியாத பேசிக் மாடல் போன்,
காலியான சி.டிக்கள்,அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ரெக்கமண்ட்டேசன் மூலம் குறிப்புதவிக்காகப் பெற்ற கம்ப்யூட்டர் சார்ந்த தலையணை புத்தகங்களுடன் என் சோதனைப் பயணத்தை ஆரம்பித்தேன்.பேருந்தில் செல்லும் போதே
திட்டமிட்டேன்.ஜீனியை அழிக்கும் புரோகிராமை என் கிராமத்து வீட்டில் இருக்கும் பழைய டெஸ்க்டாப் மூலம் செய்து அதனை சி.டிக்களில் பதிவு செய்து கொள்வது என்றும்,எவ்வகையிலும் இணையத்தை தொடர்பு கொண்டுவிடக் கூடாது என்றும்.

கூடலூர் அருகிலுள்ள என் கிராமம் பசுமையுடனும்,பனியுடனும் என்னைவரவேற்றது.வீட்டிற்குச் சென்றவுடன் பழைய டெஸ்க்டாப்பில் அமர்ந்து விட்டேன்.அதில் மூன்றுநாட்கள் கடுமையாக உழைத்தேன்.கிட்டத்தட்ட முடித்துவிட்டேன் புதிய சாப்ட்வேர் புரோகிராமை கணிப்பொறியில் சேவ் செய்து வைத்தேன்.இனி கம்ப்யூட்டரில் உள்ள விபரங்களை சி.டிக்களில்
பதிவு செய்வது தான் பாக்கி.


இரவு அம்மா கையால் சுடு சாதம் ரசம், அப்பளத்துடன் சாப்பிட்டு விட்டு நிம்மதியாக உறங்கினேன்.மறுநாள் காலை குளிக்கும் போதே தெரிந்துவிட்டது.இத்தனை நாள் இல்லாத பிரச்சனை மறுபடியும் ஆரம்பித்துவிட்டது! எப்படி? என் செயல்கள் என் கட்டுப்பாட்டில் இல்லை.அதிர்ச்சியுடன் ஓடிச்சென்று கம்ப்யூட்டரைப் பார்த்தேன்.டூர் சென்றிருந்த என் அக்கா மகன் வரம் தரும் கடவுள் போன்று மலர்ந்த முகத்துடன் கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்திருந்தான்.

"வா மாமா வந்ததுல இருந்து கம்ப்யூட்டரே கதியா இருக்கேனு தாத்தா சொன்னார்.அதான் உனக்கு வசதியா இருக்குமேனு இந்த கம்ப்யூட்டருக்கு நெட் கனெக்சன் குடுத்துட்டேன்!" என்றபடி சென்றான்.அடப்பாவி!

கம்ப்யூட்டர் ஸ்கிரீனைப் பார்த்தேன்."வாடா ஏமாற்றுக்காரா" என்ற வாசகம் ஒளிர்ந்தது.சேவ் செய்து வைத்த புதிய சாப்ட்வேர் முழுவதையும் ஜீனி படித்திருக்கும்.அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தன்னை வடிவமைத்துக் கொண்டு இருக்கும்.ஜீனியை அழிக்கும் திட்டம் இனி நடக்காது.எனக்கு தெரிந்த அத்தனை நுட்பங்களையும் பயன்படுத்தி விட்டேன்.நான் இனி
புதிதாக அறிந்து கொள்ள இன்னும் பல ஆண்டுகள் ஆகும்.பிறர் ஜீனியைப் பற்றி உடனே புரிந்து கொள்வது கடினம்.புரிய வைக்கவும் பல ஆண்டுகள் ஆகும்.அதற்குள் ஜீனி இன்னும் பல கோடி நுட்பங்களைக் கற்று இருக்கும்.

அப்போ ஜீனியை அழிக்கவே முடியாதா? இனி என் கதி? கம்ப்யூட்டர் என்ஜினியராகிய நான்,என் குடும்பத்துடன் இணைய இணைப்பே இல்லாத இடத்தில் வாழப்போகிறேனா? இல்லை என் குடும்பம் இயல்பான இணைய
வாழ்க்கை வாழ வேண்டி ஜீனி கட்டளையிட்டது போல சாக போகிறேனா?
அதிர்ச்சியில் மயங்கினேன்!

- அகன்சரவணன்

No comments:

Post a Comment