Jul 22, 2019

சந்திரயான்-2 வெற்றிப்பயணம்.







வெற்றிகரமாக ஏவப்பட்ட சந்திரயான்-2 குவியும் பாராட்டுக்கள் -இஸ்ரோ தலைவர் பேட்டியின் விவரம்:

கடந்த வாரம் ஏவப்படுவதாக இருந்து கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட இந்தியாவின் இரண்டாவது நிலவுப் பயணத் திட்டமான சந்திரயான்-2 இன்று திங்கள் கிழமை பிற்பகல் இந்திய நேரப்படி 2.43 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இந்த இராக்கெட்டிற்கான இருபது மணி நேர கவுன்ட் டவுன் நேற்று மாலை 6.43க்கு துவங்கப்பட்டது. இதற்குப் பிறகு இராக்கெட்டின் எரிபொருள் நிரப்பும் பணிகள் துவங்கின.இந்தப் பணிகள் திட்டமிட்டபடி நடந்து முடிந்த நிலையில்,ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து இந்த விண்கலத்தை சுமந்துகொண்டு ஜி.எஸ்.எல்.வி.மார்க் III இராக்கெட் சீறிப்பாய்ந்தது.
இராக்கெட் ஏவப்பட்டு இரண்டு நிமிடங்களில் அதன் வெப்பத் தடுப்பு கவசம் விலகியது.

அடுத்ததாக அதனுடைய க்ரையோஜெனிக் இராக்கெட் செயல்பட ஆரம்பித்தது.சரியாக 16.55 நிமிடங்களில் க்ரையோஜெனிக் எஞ்சின் நிறுத்தப்பட்டு,திட்டமிட்டபடி சந்திரயான் - 2 விண்கலம் இராக்கெட்டிலிருந்து பிரிந்தது.
இந்த புறப்பாடு இரண்டு காரணங்களுக்காக வெகுவாகக் கவனிக்கப்பட்டது.முன்னதாக சந்திராயன் - 2 ன் பயணம் ஜூலை 15ஆம் தேதி அதிகாலை 2.51க்குத் துவங்குமென அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால்,கடைசி நேரத்தில் அதாவது ராக்கெட் புறப்படுவதற்கு 56 நிமிடங்களுக்கு முன்பாக சில தொழில்நுட்பப் பிரச்சனைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து,இராக்கெட்டின் பயணம் ரத்துசெய்யப்பட்டது.
இதற்குப் பிறகு பிரச்சனைகள் சரிசெய்யப்பட்டு,இன்று ஜூலை 22ஆம் தேதி ஏவப்படுமென அறிவிக்கப்பட்டது.
இரண்டாவதாக,இந்தப் பயணத்தின் மூலம்தான் இந்தியா தனது விண்வெளி ஆய்வில் அடுத்த கட்டத்தை எட்டிப்பிடிக்கவிருக்கிறது. ஏற்கனவே சந்திராயன் -1ன் மூலம் நிலவின் சுற்றுப்பாதைக்கு விண்கலத்தை இந்தியா அனுப்பியிருக்கிறது. இருந்தாலும்,முதன் முறையாக இந்தப் பயணத்தின் மூலம்தான் இந்தியா அனுப்பும் கருவிகள் நிலவில் தரையிறங்குகின்றன. ஆகவே,நிலவில் மெதுவாக, திட்டமிட்டபடி,குறிப்பிட்ட இடத்தில் தரையிறங்க முடியுமா? இதுவரை யாரும் அடையாத தென் துருவத்தில் ஆய்வுகளை மேற்கொள்ள முடியுமா?என்பதை இந்தியா இந்தத் திட்டத்தின் மூலம் பரிசோதிக்கும்.

இராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்ட பிறகு கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி விஞ்ஞானிகள் மத்தியில் பேசிய இஸ்ரோவின் தலைவர் திரு.சிவன், சந்திரயான் 2 ஐச் சுமந்து சென்ற புவிசார் செயற்கைக்கோள் ஏவு வாகனம் - ஜிஎஸ்எல்வி மார்க் 3 இராக்கெட் - திட்டமிட்ட தூரத்தைவிட கூடுதலாக பறந்திருப்பதாகவும் இதனால் சந்திரயானைக் கட்டுப்படுத்த கூடுதல் கால அவகாசம் கிடைத்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். சந்திரயானின் பயணத்தில் நாளை செய்ய வேண்டிய பணிகள் இன்றே முடிவடைந்ததாகவும் அவர் கூறினார்.

'இது நிலவை நோக்கிய இந்தியாவின் வரலாற்று பயணத்தின் தொடக்கமாக உள்ளது என்று தெரிவித்த அவர்,கடந்த வாரம் இராக்கெட் ஏவுவதற்கு முன்பாக தொழில்நுட்பக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதும் விஞ்ஞானிகள் இரவு பகலாக பணியாற்றி,அதனை ஒன்றரை நாட்களுக்குள் சரிசெய்ததாகவும் அடுத்த ஒன்றரை நாட்கள்,அந்தப் பணிகள் சரியாக நடைபெற்றிருக்கிறதா என்பதை சோதித்து உறுதிசெய்ததாகவும் தெரிவித்தார்.
"இந்த மிகப்பெரிய திட்டம் இஸ்ரோ குழுவின் கடினமான உழைப்பால் சாத்தியமானது. குறிப்பாக பொறியாளர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், மற்றும் பிற ஊழியர்கள் இதற்காக தொடர்ந்து பணி செய்தனர்."

"சந்திரயான் - 2 திட்டத்தை சாத்தியமாக்கிய அனைவருக்கும் பணிவார்ந்த நன்றிகளை தெரிவிப்பது எனது கடமை."
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாகத் துவங்கிய இந்தத் திட்டத்திற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் இரவு பகல் பார்க்காமல்,தங்கள் குடும்பத்தை மறந்து பணியாற்றியதாக கூறிய சிவன்,இத்தோடு பணிகள் முடிவடைந்துவிடவில்லையென்றும் அடுத்த ஒன்றரை மாதத்திற்கு தொடர்ச்சியாக பணிகள் இருப்பதாகவும் 'விக்ரம் லாண்டர்' நிலவில் தரையிறங்கி,அதிலிருந்து பிரக்யான் வாகனம் நிலவில் உலாவ ஆரம்பிக்கும் 15 நிமிடங்கள்தான் இந்தத் திட்டத்தில் மிக முக்கியமானவை என்றும் சிவன் கூறியிருக்கிறார்.

"இந்தியா மட்டுமல்ல ஒட்டு மொத்த உலகமும் இதற்காக காத்திருக்கிறது.அதை தற்போது நாங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளோம் ''என்று சிவன் தான்ஆற்றிய உரையில் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment