Jul 22, 2019

சந்திரயான் 2 -இஸ்ரோ பயண அனுபவங்கள் :





நகராட்சி நடுநிலைப்பள்ளி,
மேட்டுப்பாளையம்,
திருப்பூர் வடக்கு,
திருப்பூர் .


இஸ்ரோ பயண அனுபவங்கள் :


ஒளிரும் இஸ்ரோவின் ஒத்தி வைக்கப்பட்ட வெற்றியைக் காண 21/07/19 ஞாயிறு காலை 6.30 மணியளவில் மாணவர்கள் நால்வரும் தம் பெற்றோருடனும்,மிகுந்த ஆர்வத்துடனும் திருப்பூர் இரயில் நிலையத்தில்  காத்திருந்தனர்.தங்கள் குழந்தைகளை இதுவரை தனியே வெளியே அனுப்பாத பெற்றோர் சற்று பதற்றத்துடன்,
மாணவர்களுக்கு தங்களது  ஆலோசனைகளையும்,அறிவுரைகளையும் மற்றொரு முறை  நினைவூட்டினர்.
பயணத்திட்டத்தை மீண்டும் ஒருமுறை விவரித்ததும்,மாணவர்களது ஆர்வம் பன்மடங்கு அதிகரித்ததை அவர்களின் முகங்களின் பிரகாசங்களில் இருந்து உணர முடிந்தது.

பயணங்கள் என்றுமே இனிமையானவை.
அதிலும் நண்பர்களுடன் கல்விச்சுற்றுலா எனும்போது குதூகலம் கும்மாளமிடுவது இயல்பே.அதற்கு நம் மாணவர்களும் விதிவிலக்கு அன்று.மனதுக்குள் மத்தாப்புடன் இரயில் நிலையத்தில் நடை போட்டனர்.

இரயில்நிலைய அமைப்பு,இரயில்களின் புறப்பாடு மற்றும் பெட்டிகளின் நிறுத்தம் (கோச் பொசிசன்) உள்ளிட்டவை குறித்து ஆசிரியரால் மாணவருடன் பகிர்ந்து கொள்ளப்பட்ட  இரயில் குறித்த தகவல்கள் மாணவர்களுக்கு புதுமையானதாகவும்,
பயனுள்ளதாகவும் இருந்தன.

மாணவர்கள் வகுப்பில் பேசிக் கொண்டே இருப்பது ஆசிரியருக்கு பெரும் சிக்கல் தான்.ஆனால் தனியான பயணங்களில் அது வேறு விதமாக,இரசிக்கக் கூடியதாகவே அமையும் என்பதை மறுப்பதற்கில்லை.
இப்பயணமும் அதற்கு விதிவிலக்கில்லை.
இரயிலின் இருக்கையில் அமர்ந்ததும் உலகக் கோப்பை முதல் உள்ளூர் செய்திகள் வரை அனைத்தையும் மாணவர்கள் தங்களுக்குள்  விவாதித்தனர்.கலந்துரையாடி விமர்சனங்களை முன்வைத்தனர்.


இரயில் -ஜன்னலோர இருக்கை - கையில் புத்தகம் சொர்க்கம் வேறு உண்டோ!கிடைத்த ஒரு ஜன்னலோர இருக்கையை மணிக்கு ஒருவர் என மாணவர் நால்வரும் பகிர்ந்து பயன்படுத்தியது உள்ளபடியே மாண்புக்குரிய ஒன்று.


ஆக்கப்பூர்வமாய் பேசுவதில் மட்டுமல்ல,
அமைதியாய் அறிவைச் சேகரிப்பதிலும் தாங்கள் வல்லவர்கள் என்பது மாணவர்களால் மற்றுமொரு முறை நிரூபிக்கப்பட்டது.ஆம்.தொடர்ந்து அரட்டைகளில் இறங்காமல் தாம் கொண்டு வந்திருந்த நூலக புத்தகங்களை அமைதியாய் வாசிக்க ஆரம்பித்தனர்.

வாசிப்பினூடே சந்திரயான் 2 பற்றியும்,தாம் காண உள்ள விண்வெளிமையம் குறித்தும் அவ்வப்போது அறிவுப்பூர்வமான அலசல் நடந்தது.

மாணவர்களை நூலகங்களில் உறுப்பினராக்கி,வாசிக்கும் பழக்கத்தை வளர்த்தது வீண் போகவில்லை.
கண் முன்னே அதன் விளைச்சல் விளைந்து நிற்கின்றது. உண்மையிலேயே ஒரு ஆசிரியராக இது மகிழ்ச்சி அளிக்கக் கூடியதே. நூலகமும் இணையமும்
இணைந்த டிஜிட்டல் தலைமுறைகள் நம்
மாணவர்கள்!

இரயில் பயணத்தை மாணவர்கள் பெரிதும் அனுபவித்தனர் என்பதில் ஐயமில்லை.ஆயிரம் வகுப்புகளில் கற்க முடியாதவற்றை ஒரு இரயில் பயணம் கற்றுக் கொடுத்துவிடுகிறது.பார்க்க  மட்டுமல்ல பயணிக்கவும் திகட்டாதது இரயில்.அறிவுத் திரள்கள் நிறைந்த நம் மாணவர்களை சென்னை தூறலுடன் வரவேற்றது.

சென்னையில் இரவு ஓய்விற்குப் பின்,22/07/2019 திங்கள் காலை சென்னையிலிருந்து "சூலூர்பேட்டை" என்னும் இடத்திற்கு அடுத்த இரயில் பயணம் தொடர்ந்தது.

சூலூர்பேட்டையில் இறங்கி முன்பதிவு செய்யப்பட்ட அறையில் மாணவர்கள் சிறிது ஓய்வு எடுத்தனர்."தான் எடுத்த பணியினை முழுமூச்சாய் செய்வோருக்கு அடுத்த வேலை தான் ஓய்வு" எனும் மொழிக்கேற்ப தாம் தயாரித்த கட்டுரைகளை மீண்டுமொரு முறை படித்துப் பார்த்து அதில் ஏற்பட்ட சிறு சிறு சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்றனர்.

மறுநாள் பொதுத்தேர்வு முடிவுகள் என அறிந்த மாணவன் முந்தின இரவு உறங்காமல் இருப்பது போல,சந்திராயன் 2  வெற்றியை ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருந்தனர்.

காலை பத்து மணியளவில் இஸ்ரோ செல்ல மாணவர்கள் தயாராகினர்.ஆந்திர அரசின் சிறப்புப் பேருந்து சூலூர்பேட்டையிலிருந்து ஸ்ரீஹரிகோட்டாவிற்கு அழைத்துச் சென்றது.
கிட்டத்தட்ட 18 கி.மீ தொலைவு கொண்ட இப்பயணம் வித்தியாசமான ஒன்றாக அமைந்தது.

இருபுறமும் வங்காள விரிகுடா வழிவிட,இடையில் பாதை சென்றது.கடலன்னையின் எழிலை அள்ளிப் பருகியபடி  நமது மாணவர்கள் பயணத்தை அனுபவித்தனர்.

ஆய்வு மையத்தின் வாயிலில் பேருந்து நின்றது.வாயிலின் உள்ளே நாம் நுழைய முதற்கட்ட உள்ளூர் காவலரின் சோதனை ஆரம்பித்தது.நமது அனுமதிக் கடிதம் மற்றும் அடையாள அட்டையினை அணுஅணுவாகச் சோதித்து,உரிய நபர் என்பதை உறுதிப்படுத்திய பின்னரே ஆய்வு மைய முதன்மை வாசலில் நுழைய அனுமதிக்கின்றனர்.

ஆய்வு மையத்தின் பேருந்து நம்மை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்கிறது.அங்கு இராணுவ மற்றும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் சோதனையும், ஆட்களையும்,பொருட்களையும்
இயந்திரத்தின் துணையுடன் சோதித்தலும் தொடர்கின்றன.

இரண்டாம் கட்ட சோதனைக்குப் பின் ஒரு 500 மீட்டர் நடை பயணமாகச் செல்ல வேண்டியுள்ளது.500 மீட்டரைக் கடந்தவுடன் இஸ்ரோ அதிகாரிகள் நமது ஆவணங்களைச் சோதித்து உறுதிப்படுத்திய பின் நுழைவிற்கான அனுமதிக் கடிதத்தில் சீலிட்டு நம்மை Launch View Gallery இன் உள் அனுமதிக்கின்றனர்.அனுமதிக் கடிதத்துடன் இராக்கெட் மற்றும் செயற்கைக்கோள்களின் பல்வேறு சுவரொட்டிகள் (Wall posters),
சந்திரயான் 2 குறித்த விளக்க கையேடு மற்றும் சந்திரயான் 2 படம் அச்சிடப்பட்ட தொப்பிகளை அன்பளிப்பாக வழங்குவது சிறப்பு.


பல்வேறு சோதனைகளுக்கு தாமதம் ஆன போதும்,அவற்றை ஒவ்வொன்றாகத் தாண்டும்போது ஏற்படும் மகிழ்ச்சி,விருந்திற்குப் பின் சமையற் கலைஞருக்கு கிடைக்கும் பாராட்டு போன்று எல்லையற்றது.அதனை நம் மாணவர்கள் நேரில் உணர்ந்தனர்.

விண்வெளி மையத்தில் நம் மாணவர்கள் மூன்று வித இடங்களைக் கண்டு இரசித்தனர்.

1) Rocket Garden.
2) Launch View gallery.
3) Space museum.

Rocket garden இல் 1:1 உள்ளிட்ட பல்வேறு அளவிலான,SLV முதல் இன்றைய GSLV Mk3 வரையில் அனைத்து வித இராக்கெட்டுகளையும் அவை குறித்த விளக்கங்களுடன் காட்சிக்கு வைத்துள்ளனர்.அவற்றின் அருகே நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ள அனுமதிக்கின்றனர்.
நமது மாணவர்கள் இராக்கெட்டுகளுடன் பல்வேறு கோணங்களில் புகைப்படம்  எடுத்து மகிழ்ந்தனர்.

ஆறு பிரிவுகளைக் கொண்ட ஸ்பேஸ் மியூசியத்தில் இந்திய விண்வெளித் துறையின் வளர்ச்சி கண்முன்னே நிழலாகிறது.தாம் படித்துத் தெரிந்தவற்றுடன் Musium இல் உள்ளவற்றை ஒப்பிட்டு மகிழ்ந்தனர் நம் மாணவர் .Space museum கண்டுகளிக்க ஒரு நாள் போதவே போதாது.இதற்காகவே தனியாகப் பயணம் வர வேண்டும்.அத்தனை அற்புதமாய் மிளிர்கிறது Space Musium.

இறுதியாக Launch View Gallery.இதற்காகத்தான் இத்தனை மைல்கள் தாண்டி வந்தோம் நாம்.கிரிக்கெட் ஸ்டேடியம் போன்று படிக்கட்டு அமைப்பில் கட்டமைக்கப்பட்டுள்ளது Launch View Gallery.உரிய இடத்தில் அமர்ந்து,கவுண்ட் டவுனை மாணவர்கள் கண்காணிக்க ஆரம்பித்தனர்.இங்கு அமர்ந்து பார்க்கும் போது சதீஸ்தவான் விண்வெளி மையத்தின் இரு Launch Pad களும் தெளிவாகத் தெரிவதில்லை.ஆனால் சந்திரயான் 2 GSLV Mk 3 இல் பொருத்தப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளதைப்  பெரிய திரைகளில் காண முடிகிறது.

அங்கு என்ன நடக்கிறது என்பதை மூன்று பெரிய திரைகளிலும் தெளிவாகக் காண முடிகிறது.ஆங்கிலத்தில் நிகழ்வுகளை அழகாக விவரிக்கின்றனர்.

நேரம் ஓட ஆரம்பிக்கிறது. கவுண்ட் டவுன் ஓடுகிறது.மாணவர்களின் இதயத்துடிப்பும் வேகமாக ஓடுவதை உணர முடிகிறது.கவுண்ட் டவுனில் எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கிறது.Gallery இல் அறிவிப்பு உச்சகட்டத்தை எட்டுகிறது. 10,9,8......... 2,1,0 சீறிட்டுக் கிளம்புகிறது இராக்கெட்.


அந்த கனத்தின் உணர்வுகளை விவரிக்கவே முடியாது.மனம் முழுமையான நிறைவடையும் கனம்.சுற்றி எங்கெங்கு காணினும் உற்சாகக் கூச்சல்கள்,வெற்றி முழக்கங்கள்.நாமே ஏதோ பெரிதாய் சாதித்த உணர்வு."இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" என விண்ணியலை அறிந்து கொள்ளுதலின் முதற்படியை முற்றாய் கடந்த முழு நிறைவுடன் விண்வெளி மையத்திலிருந்து மாணவர்கள் தம் இருப்பிடம் திரும்பினர்!

                                     Photo gallery :













1 comment: