Jan 31, 2021

"Positive Pay" என்னும் புதிய காசோலை சரிபார்ப்பு முறை!

 














     






"Positive Pay செயல்முறை...! - காசோலை மோசடிகளைத் தடுக்க ரிசர்வ் வங்கியின் புதிய பிளான்"


> ஜனவரி 2021 முதல் Positive Pay முறையிலான காசோலை பரிவர்த்தனை முறை அனைத்து வங்கிகளிலும் நடைமுறைக்கு வந்துள்ளது.


> 50,000 ரூபாய்க்கு மேலுள்ள காசோலைகளுக்கு இந்த வசதி கிடைக்கும்.


> 5,00,000 ரூபாய்க்கு மேலுள்ள காசோலைகளுக்கு Positive Pay கட்டாயம்.




வங்கிகளில் காசோலைகள் (Cheques) மூலமாகச் செய்யப்படும் பரிவர்த்தனைகளின் அளவு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.அதே நேரத்தில்,காசோலைகள் தொடர்பான குற்றங்களும்,மோசடிகளும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன.


காசோலைகள் தொடர்பான மோசடிகளைக் குறைக்கவும்,காசோலைகள் மூலம் பணம் செலுத்துவதில் ஏற்படும் முறைகேடுகளைத் தடுக்கவும்,பரிவர்த்தனைகளை மிகவும் பாதுகாப்பானதாக மாற்றவும் 50,000 ரூபாய்க்கு மேல் பணமதிப்பு உள்ள காசோலைகளுக்கு "Positive Pay" என்னும் ஒரு செயல்முறையை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது.


2019 ஆகஸ்ட்டில் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழுவின் (Monetary Policy Committee-MPC) மறுஆய்வுக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.


"Positive Pay" முறை விளக்கம்:


Positive Pay என்பது காசோலைகளின் மோசடியைத் தடுக்கும் மற்றும் மோசடியைக் கண்டறியும் ஒருவகை அம்சமாகும்.இந்த முறையானது வங்கிப் பரிவர்த்தனைகளில் இன்னொரு அடுக்கு பாதுகாப்பை வழங்குகிறது.இந்தப் புதிய அம்சத்தின்படி காசோலை பணமாக மாற்றப்படுவதற்கு (Encash) முன்னர் காசோலை  தொடர்பான அனைத்து தகவல்களும் இருமுறை சரிபார்க்கப்படுகின்றன.










Positive Pay செயல்படும் முறை


* ரூபாய் 50,000 க்கு மேல் மதிப்புள்ள காசோலையை வழங்கும் நபர்,தனது கணக்கு உள்ள வங்கியினை நேரடியாக அணுகியோ,ஏ.டி.எம் மூலமாகவோ,தொலைபேசி - எஸ்.எம்.எஸ் மூலமாகவோ,மொபைல் செயலியிலோ அல்லது இணையதளத்திலோ தன்னால் வழங்கப்பட்ட காசோலை தொடர்பான அனைத்து தகவல்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.


* காசோலையைப் பயனாளிக்கு வழங்குவதற்கு முன்பு அதன் இரு பக்கங்களையும் புகைப்படம் எடுத்து (Optional) அத்துடன் காசோலை எண்,காசோலை தேதி,பணம் செலுத்துபவரின் பெயர்,கணக்கு எண்,தொகை போன்ற தகவல்களையும் தனது வங்கியுடன் பகிர வேண்டும்.


* காசோலை சார்ந்த அனைத்துத் தரவுகளும் வழக்கமான முறையில் (CTS) வங்கியால் சோதிக்கப்படும்.அத்துடன் பயனாளி பகிர்ந்த காசோலை குறித்த தரவுகள் அனைத்துமே Positive Pay முறையிலும் முழுமையாகச் சோதனை செய்யப்படும்.


* காசோலையில் உள்ள மற்றும் அளிப்பவர் பகிர்ந்த தகவல் தரவுகள் பொருத்தமாக இருந்தால் மட்டுமே காசோலைக்குப் பணம் வழக்கப்படும்.


* Positive Pay முறையிலான காசோலை சோதனையில்,தரவுகளில் ஏதேனும் பொருத்தம் இல்லாமல் இருக்கும் போது,காசோலைக்குப் பணம் வழங்குவது நிறுத்தி வைக்கப்படும்.


* வங்கி காசோலை வழங்கிய நபரைத் தொடர்பு கொண்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காசோலையின் உண்மைத் தன்மையினை உறுதிப்படுத்திக் கொள்ளும்.


* இறுதியாகக் காசோலை வழங்கிய நபரின் முடிவின் அடிப்படையில் காசோலைக்குப் பணம் வழங்கப்படும் அல்லது மறுக்கப்படும்.


சிறப்பம்சங்கள்:


# Positive Pay என்பது காசோலை மோசடியைத் தடுக்கப் பயன்படுத்தப்படும் ஒரு தானியங்கி (Automatic) பண மேலாண்மை சேவையாகும்.


# மோசடி,இழப்புகள் மற்றும் பிற குறைபாடுகளுக்கு எதிரான ஒருவரின் காப்பீட்டு வடிவமாக இந்த அம்சம் செயல்படுகிறது.


# Positive Pay அம்சம் சேமிப்புகளை நெறிப்படுத்தவும் மற்றும் மீட்டெடுப்புகளை முறைப்படுத்தவும் செய்கிறது.


# மோசடியைத் தடுக்க இந்த அம்சம் எளிய மற்றும் பயனுள்ள வழியாகும்.


# ஏறக்குறைய 20% பரிவர்த்தனைகள் மற்றும் 80% சதவீதம் பணமதிப்பு Positive Pay அம்சத்தின் கீழ் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


வரம்புகள்:


# 50,000 ரூபாய்க்கு மேற்பட்ட தொகையுடைய காசோலைகளுக்கு இந்த வசதி கிடைக்கும்.வாடிக்கையாளர் விரும்பினால் பயன்படுத்திக் கொள்ளலாம்.


# ஆனால் 5,00,000 ரூபாய்க்கு மேற்பட்ட காசோலைகளுக்கு Positive Pay முறை கட்டாயமாகும்.












Positive Pay முறையின் பயன்கள்:


1)காசோலை பரிவர்த்தனைகளின் போது மோசடிகள் நடைபெறுவதைக் குறைக்கிறது.


2)காசோலையின் பரிவர்த்தனைப் பிழைகள் ஏற்படுவதைத் தடுக்கிறது.


3)வங்கி மற்றும் வாடிக்கையாளர் இடையே நல்லிணக்கத்தினை உண்டாக்குகிறது.


4)வாடிக்கையாளரின் சொத்துமதிப்பு பாதுகாக்கப்படுகிறது.


5)வாடிக்கையாளர் தங்கள் கணக்கின் மீதான கட்டுப்பாட்டை அதிகரிக்கச் செய்கிறது.


6)நிறுவனங்களின் வணிக நடவடிக்கைகள் நெறிப்படுத்தப்படுகின்றன.


7)காசோலைகளின் நல்லிணக்கத்தை மேம்பட்ட தானியங்கி முறைக்கு மாற்றுகிறது.


8)வணிகத்தின் நம்பகத்தன்மையை அதிகரிக்கச் செய்கிறது.


9)கணக்குகளிடையே பரிமாற்றத்தையும், செலுத்துதலையும் எளிதாக்குகிறது.


10)தணிக்கை கட்டுப்பாட்டை மேம்படுத்துகிறது.


11)பரிவர்த்தனை சமநிலையின் துல்லியத்தை மேம்படுத்துகிறது.


13)தள்ளுபடி அபாயத்தைக் குறைக்கிறது.


14)வணிகத்தில் நேரத்தையும்,பணத்தையும் மிச்சப்படுத்துகிறது.


15)வங்கியியலின் நம்பகத்தன்மைையை மேம்படுத்துகிறது.


இந்த Positive Pay போன்றதொரு அம்சத்தை ஐசிஐசிஐ வங்கி 2016 ஆண்டு முதலே செயல்படுத்தி வருவது குறிப்பிடத் தக்கது.இந்திய ரிசர்வ் வங்கி,இந்த வழிமுறை தொடர்பான நிலையான இயக்க நடைமுறைகளை (Standard Operating Procedure-SOPs) நாணயக் கொள்கைக் குழுவின் பரிந்துரைப்படி அனைத்து வங்கிகளுக்கும் அளித்துள்ளது.



ஜனவரி 2021 முதல் Positive Pay முறையிலான காசோலை பரிவர்த்தனை முறை (Cheque Truncation System-CTS) அனைத்து வங்கிகளிலும் நடைமுறைக்கு வந்துள்ளது.







இந்த வசதி போலியான காசோலைகள் மற்றும் தவறான நபர்களிடம் செல்லும் காசோலைகள் போன்றவற்றினால் வாடிக்கையாளருக்கு ஏற்படும் இழப்புகளைத் தடுக்கும் கேடயமாக அமையும் என்று நம்புவோம்!


- அகன் சரவணன்

No comments:

Post a Comment